Slider-1-Title-Here

Enter-Slider-1-Description-Here

Slider-2-Title-Here

Enter-Slider-2-Description-Here

Slider-3-Title-Here

Enter-Slider-3-Description-Here

Slider-4-Title-Here

Enter-Slider-4-Description-Here

Slider-5-Title-Here

Enter-Slider-5-Description-Here

இளையராஜா - ஏ ஆர் ரஹ்மான், அர்த்தமற்ற விவாதங்களும் பின் நவீனத்துவ இசையும் 1

senthilkumaran | 9:55 PM |

ஒரு குறிப்பிட்ட இசையும், இசையமைப்பாளரும் நம்மை கவர்வதற்கு என்ன காரணம். நம்மால் எல்லா இசையையும் ரசிக்க முடியவில்லையே, சிலருக்கு சில இசை பிடிப்பதற்கும் சிலர் வெறுப்பதற்கும் என்ன காரணம்? இப்படி சில அடிப்படை விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக இருந்தாலும் ஒரு சில காரணங்களால் அதை தவிர்த்திருக்கிறேன். அதில் முக்கியமானது, சில இசை மேதமைகளைப் பற்றிப் பேசும்போது அதிலும் இந்திய இசையைப் பற்றிப் பேசும் போது தவிர்க்கமுடியாமல் சில இசையமைப்பாளர்களின் மேன்மையை பேசுவதாக அர்த்தப்படும், அவரின் பால் நமக்கிருக்கும் ஈர்ப்பையும் மதிப்பையும் பிரச்சாரம் செய்வதுபோல் தோன்றும்.

அதனால் எக்காலத்திலும் அது இசை சார்ந்த நேர்மையான எழுத்தாக யாரும் பார்க்கத்தவறலாம். எனது தொழில் சார்ந்த பல விஷயங்களுக்கு அவை ஒரு தடையாக கூட அமையலாம் என்றும் தவிர்த்திருக்கிறேன். தொழில் ரீதியில் ஒரு இசையை பார்ப்பதும், அது கடந்த ஒரு ரசிக மனப்பான்மையில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதை வித்தியாசப்படுத்தி தீர்க்கமாக என்னால் சொல்லிவிட முடியுமா என்ற சந்தேகங்களும் எனக்குள் இருந்தது உண்டு. அதிலும் ஒர் இசையை நான் ரசிப்பதால் அதற்கு நேர்மாறான இன்னொரு இசையை மோசமாக சொல்ல நேரிடலாம் அல்லது ஒரு ரசனையை விளக்க கோட்பாடுகளை சொல்லவேண்டும், அது இசை ரசனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக அமைந்துவிடும்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி என்னை உந்தியது சாரு அவர்களின் எழுத்து. அவர் 'நான் கடவுள்' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி உயிர்மையில் எழுதியதை படித்தபோதே எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பிறகு வழக்கம்போல் அது அவருடைய கருத்து, நான் அதற்கு எதிர்மறையாக ஒன்றை நிறுவ நினைத்தால் அது என்னுடைய கருத்தாகும். யாரும் பொதுப்படையாக ஒரு உண்மையை எப்படி நிறுவ முடியும், அது காலத்தின் கையில் அல்லவா இருக்கிறது என்று விட்டுவிடுவேன். ஆனால் மீண்டும் அதைப்பற்றி எழுத எண்ணம் வந்ததற்குக் காரணம், அவருடைய சமீபத்திய குமுதம் சர்ச்சை. அதிலும் இளையராஜா. அதன் தொடர்ச்சியாக காலம் காலமாக பேசப்படும் ஏ ஆர் ரஹ்மானா இளையராஜாவா என்ற அர்த்தமற்ற விவாதங்கள்.

இது ஒரு விஷயத்தைத் தெளிவாக எனக்கு புரிய வைத்தது, அதாவது இசையை ரசிப்பதோடு நாம் நின்றுவிடுகிறோம். ஒரு இசையை எப்படி அணுகுவது என்பது நமக்கு இன்னும் புரிந்ததில்லை. அதிலும் வார்த்தைக்கு வார்த்தை எங்க ஊரு பாட்டுக்காரனை வம்புக்கிழுப்பதும் சலம்டாக் மில்லினியரை, நான் கடவுளையும் ஒப்பிடுவதையும், சில சமயம் அடிப்படையில்லாமல் சில உதாரணங்களை கூறுவதும், நாம் இசை கடந்து ஒரு தனி நபர் சாடலையும் போற்றலையும்தான் முன்னிறுத்துகிறோம் என்று தோன்றுகிறது. அதுவும் நமது தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது அல்லது நமக்கு பழக்கப்பட்ட, நமது மனதுக்கு நெருக்கமாக உணரும் ஓர் இசை அனுபவத்தின் வழியே நடக்கிறது.

ஓர் இசையை எப்படி அணுகுவது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, ஏன் சில குறிப்பிட்ட இசைப்பிரிவு (Genre) நமக்குப் பிடிக்கிறது என்று பார்ப்போம். முதல் காரணம் நமது கலாச்சாரம், சமூக அரசியல் அமைப்பு, வர்க்க சூழல், இதனுடன் சேர்ந்த நவீன காரணமாக டெக்னோலஜியும். ஓர் இசை உருவாகும் சுழலின் அடிப்படைக் காரணமும் அதுதான். காரணம் இசை என்பது ஒரு தொடர்பு சாதனம் என்பதையும் தாண்டி அது உலவி வரும் சமூகத்தின், அதன் கலாச்சரத்தின் அடையாளமாக இருக்கிறது. சைமன் ப்ரித் (Simon Frith) என்ற இசை ஆய்வாளர், இசை என்பது ஒரு சமூகத்தின் அடையாளம் மட்டுமல்ல மாறாக ஒரு சமூகத்தை கட்டமைப்பதாகவும் இருக்கிறது என்று கூறுகிறார். இந்த அற்புத கோட்பாட்டை தமிழில் அழகாகவும் ஆழமாகவும் அணுகியவர் சாரு அவர்கள். அவருடைய கலகம் காதல் இசை என்ற நூலில்.

மிக எளிமையாக விளக்கவேண்டும் என்றால், ஹிப் ஹாப் இசையை எடுத்துக்கொள்வோம். ஹிப் ஹாப் இசை, ஆப்பரிக்க அமெரிக்கர்களின் இசையாக 70களில் தோன்றியது. பிற்படுத்தப்பட்டோரின் உளவியல் காரணமாக வெளிப்பட்ட வன்முறை கலாச்சாரத்தின் ஒரு பிரிவாக இந்த இசை இருந்தது. ஹிப் ஹாப் பாடகர்களின் தோற்றத்தை நினைத்து பாருங்கள். பயமுறுத்தும் தோற்றத்துடன், பெரிய பெரிய இரும்பு சங்கலிகளை மாட்டிக்கொண்டு, தனது உடல் பருமனைவிட இரண்டு மடங்கு பெரிய அளவு ஆடை. பாடல் வரிகளிலும் வன்முறை இருக்கும். இதை இன்னும் நெருக்கமாக புரிந்துக் கொள்ள அது சார்ந்த வரலாற்றை நாம் அணுக வேண்டும். அந்த இசை இப்பொழுது வியாபார சந்தையில் முன்னெடுக்கப்பட்டு இன்றைய இளைஞர்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்த வரியை முடிக்கும் போது சட்டென்று ஒர் உணர்வு, இதுவரை இதையும் ஒர் இசையாக பார்த்த என்னால் அதன் ஆதார கூறுகளை எழுதியவுடன், இனி இந்த இசையைப்பற்றிய எனது மதிப்பீடு என்னவாக இருக்கும் என்ற அச்சம் பற்றிக்கொள்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நீங்களுமே இனி ஹிப் ஹாப் கேட்கும் போது, அதன் பாடகர்களை இந்த இசையையும் தாண்டி அவர்களது சமூக பின்னனியையும், உளவியல் நிலைப்பாடுகளையும் என்ன வேண்டி வரும் (ஒருவேளை உங்களுக்கு இது முன்னமே தெரியாமல் இருந்தால்).

ரோக் பாடகர்களின் தோற்றத்தை நினைத்துப்பாருங்கள். ஹெவி மெட்டல் பாடகர்களின் தோற்றத்தை நினைத்து பாருங்கள். ஏன், நமது கர்நாடக பாடகர்களின் தோற்றத்தை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு இசைப் பிரிவை சார்ந்தவர்களும் ஒவ்வொரு அடையாளங்களை முன்னிறுத்துகிறார்கள். ஒவ்வொரு இசைப் பிரிவும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்டப் பாடுப் பொருளையே கொண்டிருக்கும் அல்லது மனோநிலையை பிரிதிபலிக்கும். நமக்கு பழக்கமான கர்நாடகம் இறைவனைப் பற்றியே பெரும்பாலும் பாடுவதுபோல். ஏன் இந்த அடிப்படையில் இசை இயங்குகிறது என்றால், அது நமது கலாச்சாரத்தின், அரசியலமைப்பின் அடையாளமாக இருக்கிறது. அதன் ஊடாக மீண்டும் அந்த சமூகத்தின் அடையாளத்தை கட்டமைப்பதாக இருக்கிறது. அது புரட்சியிலும் போராட்டத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை. எல்லா நிலைகளிலும் வெளிப்படுவது.

இப்பொழுது தமிழ் நாட்டு கிராமத்தில் மாடுமேய்க்கும் ஒரு கதாநாயகனை கற்பனை செய்து பார்ப்போம் (தயவு செய்து ராமராஜனை தவிர்த்த கற்பனை). அவனுக்கு ஒரு பாடலை யோச்சிப்போம். எங்க ஊரு பாட்டுக்காரன் அய்யா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ..... இது நமக்கு பெரிய நகைச்சுவை கொடுக்கும் என்றால் நாம் எதை நகைக்கிறோம்? இசையையா? கிராமத்து மாட்டுக்கார இளைஞனையும் அவனது தோற்றத்தையுமா அல்லது நமது தற்கால மனப்பான்மைக்கு (அதிலும் கணிணி யுகத்தில் இருக்கும், இன்றைய நடுத்தர வர்க்க வாழ்க்கையில் பழகிய நமக்கு) முற்றிலும் அந்நியமாய், விநோதமாய் இருக்கும் அந்த கிராமத்து கலாச்சாரமா? அப்படி ஒரு தோற்றத்தோடு இருக்கும், கல்வியறிவு இல்லாத இளைஞனின் மனோநிலையையும், வாழ்க்கையையும் உறவுகளையும் அவன் அணுகும் விதத்திலும், மற்ற எல்லா நிலைகளிலும் நமக்கு அந்நியமாகவே இருப்பவன். அவனுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தால் (அவர் நிச்சயமாக அத்தகைய படங்களுக்கு இசையமைப்பதைத் தவிர்த்திருப்பார். அது ஒரு வியாபார யுத்தி என்பதை நானும் அவரை போன்றோரும் மட்டுமே தெரிந்திருக்கும் ஒன்று), கருத்தம்மா அல்லது கிழக்குச் சீமையிலே எதாவது ஒரு பாடல் போல் இருந்திருக்குமா? ஏ ஆர் ரஹ்மான் கோர்ட் பிரயோகத்தின் வழி அந்த இசை தமிழ் நாட்டு எல்லைகளை கடந்து ஒலிக்கவேண்டும் என்று தீவிரமாக இருப்பவர். அதனால் நிச்சயம் அந்த கிராமத்து இளைஞனுக்கு எந்த வகையிலும் அந்த இசை நெருக்கமாக இருக்கமுடியாது.

கதகேளு கதகேளு கரிமேட்டுக்கருவாயன் கத கேளடியோ என்ற பாடலாகட்டும் அல்லது கோட்டையைவிட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாட சாமி பாடலாகட்டும். கிராமத்து கலாச்சாரமும், அவர்களிடம் நிலவிய அடக்கு முறையும், சமூக அரசியல் கட்டமைப்பும் அதன் ஊடாக அந்த மனிதர்களிடம் எழும்பிய உளவியல் கூறுகளும், இந்தப் பாடல்களை திரையிசை தாண்டிய தரிசணத்திற்கு உயர்த்துகிறது. ஒரு பாடலின் வரவேற்பும் ரசனையும் அது சார்ந்த மக்களிடதான் அதிகம் எடுபடுவதற்குக் காரணம் அது அவர்களின் ஆழ்மன இசையாக அடையாளம் காணப்படுவதால்தான். இந்த கிராமத்து வாழ்க்கையையும், பண்பாட்டு கூறுகளையும் பால் நிலாப் பாதை என்ற அவரது நூலில் இளையராஜா கூறியிருப்பார். இந்தப் பண்பாட்டு உளவியல் ஊடாக கேட்கும் போது கோட்டையவிட்டு வேட்டைக்குப் போகும் சுடல மாட சாமி நமது உணர்வு வெளியில் பிரமாண்டம் கொள்வதை நிச்சயம் நம்மால் தவிர்க்க முடியாது.

அதனால் இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் அல்லது வேறு ஒரு இசையமைப்பாளரையோ ஒரே நேர்கோட்டில் வைப்பது எந்த வகையில் நேர்மையான பார்வையாக இருக்க முடியும்? அது முற்றிலும் நமது ரசனையில் இருந்து எழுவதுதானே? அதைவிட அபத்தமானது சலம்டாக் மில்லினியரையும் நான் கடவுளையும் ஒப்பிடுவது. இரண்டு இசையின் வெளிபாடுகளுக்கும் இரு வேறு பெரும் காரணங்கள் இருக்கிறது. அதை இசையமைப்பாளன் மட்டும் தீர்மானிப்பதில்லை. மற்றொன்று இசையை இரு இசையமைப்பாளர்களும் எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் பொருத்தது. அதை மேலும் விரிவாக பேச சில அச்சங்கள் என்னை தடுக்கிறது. காரணம் அதனால் ஒருவரின் இசையை உயர்த்தியும் ஒருவரின் இசையை தாழ்த்தியும் எழுதுவது போல் தோன்றும். அதை நான் முற்றிலும் தவிர்க்க நினைக்கிறேன். அதையும் சிலர் எனது தொழில் சார்ந்த மனநிலை என்கின்றனர். நிச்சயமாக இல்லை. வந்தே மாதரம் போன்ற ஒரு அற்புதமான இசையை இளையராஜா செய்திருக்க முடியாது. திருவாசகம் போன்ற பேரிசையை ஏ ஆர் ரஹ்மான் செய்திட முடியாது. ஜோதா அக்பரை இளையராஜாவும் பழசி ராஜாவை ஏ ஆர் ரஹ்மானும் செய்திட முடியாது. ஆனால் அதற்காக ஒருவரின் இசையைவிட மற்றொருவரின் இசை எப்படி உயர்ந்ததாக ஆகிவிட முடியும்? ஏ ஆர் ரஹ்மான் சிறந்த இசைத் தயாரிப்பாளர் (Music Producer), இளையராஜா சிறந்த இசையமைப்பாளரும் (Composer) இசை ஒருங்கிணைப்பாளரும் (Arranger). இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்து செயல்படும்போது, இந்த அடிப்படை அம்சங்கள் துல்லியமாக புலப்படும். நாம் இசையை அதன் சுய வெளியில் தரிசிப்பதைத் தவிர்த்து சில மனத்தடைகளின் ஊடாக தரிசிக்கிறோம், அதன் விளைவுதான் இந்தத் தொடரும் சர்ச்சைகள்.

ஏன், நமது ரசனை வேறுபடுகிறது? அது எப்பொழுதும் நமக்கு பரீட்சயமான தளத்தில்தான் செயல்படுகிறது. இளையராஜாவின் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா என்ற பாடல் வெளிநாடுகளில் கூலித்தொழிலாளர்களாக இருக்கும் அனைவரின் தாய்மண்ணின் ஏக்கத்தை கிராமிய மனநிலையில் வெளிப்படுத்தும் ஒரு பாடல். மலேசியாவில் கார் கழுவும் இடங்களிலும், முடிவெட்டும் நிலையங்களிலும், உணவகங்களிலும், விடியோ நிலையங்களிலும் எங்கெல்லாம் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இளையராஜாவின் பாடல்கள்தான் கேட்கப்படுகிறது. அது எப்பொழுதும் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அவர்கள் அவர்களின் தொலைந்துபோன அடையாளங்களை அந்த இசையிலிருந்து மீட்கிறார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.

சாஸ்வதியிடம் ஒரு முறை கர்நாடக இசையில் புது முயற்சிகள், புது கீர்த்தனைகள் என்று விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். கர்நாடகத்தின் பிரயோகம் நேரிடையாக வெளிப்படாமல் இருந்தாலும் அசலான கர்நாடகத்தின் எல்லா அம்சங்களும் உள்ள பாடல்கள் பல வந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று. தனக்கு தெரிந்த ஒரு பாடலாக இளையாராஜாவின் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலவருமா என்ற பாடலை கூறினார். அதைவிட நுட்பமாக கர்நாடக இசையை பயன்படுத்தி நான் கேட்டதில்லை என்றார். கிராமியமாக தோன்றும் ஒரு பாடல் எப்படி அசலான கர்நாடகமாக அவரால் பார்க்க முடிகிறது என்று ஆச்சரியத்தோடு கேட்ட போது அவர் அந்தப் பாடலை அதே மெட்டில் கர்நாடகத்தில் பாடி காட்டினார். கர்நாடகத்தை பற்றி முதலிலேயே கூறியது போல் சில குறிப்பிட்ட பாடுபொருள்தான் அதன் உள்ளடக்கமாக ஏற்கப்படுகிறது. அதற்கெதிரான முயற்சிகள் கேட்பதற்கு சில அசௌகரியங்களை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால் இந்த பாடலின் வரியை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும், அதை கர்நாடகத்தில் ரசிப்பதற்கு.

இங்கு முற்றிலும் வேறுப்பட்ட இரு வேறு ரசிப்பு மனப்பான்மை வெளிப்படுகிறது. அதுவும் அவர்கள் பின்புலம் சார்ந்த அவர்களுக்கு பரீட்சயமான ரசிப்பு மனப்பான்மை. திரும்பவும் ராமராஜனையும், சிங்கப்பூரில் அவருக்கு ஒரு பாடலையும் நினைத்தால் மற்றவர்களுக்கு இந்தப் பாடலும் வெறும் நகைச்சுவையாகத்தான் தோன்றும். அதையும் தாண்டி ஆப்பரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து அடிமையாய் வாழும் ஒரு கலைஞன் தனது மண்ணை நினைவு கூறும் ஒரு பாடலுடன் இதை ஒப்பிட்டோமென்றால், நமது இசை ரசனை நமக்கு பலகாலமாக பரீட்சயமான ஒரு தளத்தில் மட்டுமே இயங்குகிறது என்று அர்த்தம்.

ஆனால் பெரும்பாலும் இத்தகைய இசை பார்வைகள் செமியோதிக் (Semiotics) கோட்பாட்டின் அடிப்படையில்தான் விவாதிக்கப்படுகிறது. அதாவது பாடல்வரிகளின் அடிப்படையில். வரிகள் அதற்கான அர்த்தங்களுடனும், பண்பாட்டு கூறுகளுடனும், வரலாறுகளுடனும், அரசியல் சமூக அடிப்படையுடன் அணுகப்படும் ஒன்று. அதன் காரணமாகவே அந்தப் பாடலும் இசையும் இந்த அனைத்து விஷயங்களின் அடிப்படையில் அணுகப்படுகிறது.

ஆனால் அதுவே வரிகள் இல்லாத இசையை எப்படி அணுகுவது? இதை இசைகருவிகளின் தேர்ந்தெடுப்பிலும் அதன் பிரயோகத்தின் அடிப்படையிலும் அணுகலாம். ஒவ்வொரு இசைக்கருவிக்கும், அதன் பிரயோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட உணர்வை அடையாளப்படுத்தும் தன்மையுண்டு. அதன் அடிப்படையில் இசைப்பிரிவை வகைப்படுத்தலாம். லத்தீன் இசையையும் அரேபிய இசையையும் அதன் இசைக் கருவிகளையும் அந்த இசைக்கருவிகளை பிரயோக்கிம் தன்மையையும் வைத்தே அடையாளப்படுத்திவிட முடியும். பல சமயங்களில் இசை குறியீடும் அல்லது சுவரப்பிரயோகமும் அதை அடையாளப்படுத்திவிடும். அதற்கு பாடல் வரிகள் தேவையாய் இருப்பதில்லை.

ரோக் இசையை எடுத்துகொள்வோம். அதன் முக்கிய அம்சம் கிதார் அல்லது எலெக்டிரிக் கிதார். இந்த கிதாரின் பிரயோகம் ஒரு வித அக்ரெஸிவ் (aggressive) முறையில் பிரயோகிக்கப்படும். அதன் நோக்கமே மன அழுத்தத்தின் உச்ச வெளியேற்றம். (ரோக் இசையிலேயே பல் உட்பிரிவுகள் இருந்தாலும் ஆதார நாதம் இந்த அடிப்படையில்தான் அணுகப்படுகிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருவித அர்த்தமற்ற போக்கையே காண்பவர்கள் இந்த ரோக் இசை கலைஞர்கள். கட்டற்ற ஒருவித வாழ்வியல் விரும்பிகளாகவும் இருப்பார்கள். அவர்களது தோற்றத்தை நினைத்து பாருங்கள். பெரும்பாலும் ஜீன்ஸ் அதிலும் கிழிந்த ஜீன்ஸ், தலைமுடி நீண்டும் ஒழுங்கற்றும் இருக்கும். பெரும்பாலும் விநோதமான தி ஸர்ட் (t-shirt) அவர்களது விருப்ப ஆடை. பெரும்பாலும் மண்டை ஓடு படம் கொண்ட தி ஸர்ட். இந்த மனநிலையை பிரதிபலிக்க கிதாரும் அதை பிரயோகிக்கும் விதமும் அவர்களுக்கு பெரும் துணையாக இருக்கிறது.

கோஸ் ரைடர் (Ghost Rider) என்ற ஒரு படம், அதில் கதாநாயகன் அவனது ஆன்மாவை சைத்தானுக்கு அர்பணித்து விடுகிறான். அதனால் அவனும் பேயாக அலைகிறான். ஆனால் நல்லவன். மோட்டர் சாகசத்தில் ஈடுபட்டுள்ளவன். அந்த படத்தின் மொத்த பின்னனி இசையும் ரோக் இசையின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவன் மனநிலையை, வாழ்க்கை முறையை வார்த்தைகள் அற்று, காட்சிகள் அற்று விளக்க அந்த வகை இசைதான் தேவையாய் இருக்கிறது. காட் பாதர் (God Father) ஆகட்டும், க்லேடியேட்டர் (Gladiator) ஆகட்டும், Children of Heaven ஆகட்டும், ஒரு திரைப்படத்தின் பின்னனி இசை இந்த அடிப்படை அம்சங்களை மீறுவதில்லை. அதாவது மைய கதாப்பாத்திரத்தை எல்லா உளவியல், சமூக கலாச்சார கூறுகளுடன் அணுகுவது அல்லது கதையின் மைய கருவை இதே கூறுகளுடன் அணுகுவது. இங்கு வரிகளற்ற இசைக்கு தேவையாய் இருப்பது வாத்தியங்கள், சுவரப்பபிரயோகங்கள். இதன் ஊடாக ஒரு குறிப்பிட்ட இசைப்பிரிவை அடையாளம் காட்டி நிற்கும். அதை தொடர்ந்து அந்த இசையின் சமூக கலாச்சார கூறுகளுடன் பொருத்தி நாம் அதன் அடுத்தக்கட்ட புரிதலுக்கும் உளவியல் அணுகுமுறைக்கும் நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் ஹலிவூட்டில் இசையமைப்பாளரையும் இசையையும் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்ப்போம். முதலில் இந்த ஜோன்ரேவின் அடிப்படையில்தான், பிறகு மியூசிக் சுப்பவைசர் (Music Supervisor). Genre 100க்கும் மேற்பட்டு உள்ளது. விரிவாக காணவேண்டும் என்றால் அமேசோன் (amazon) இசை தளத்தில் பார்க்கலாம். ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்தை தொடங்கும் முன்பு, ஒரு சின்ன குறிப்புகளுடன் எல்லா இசை பதிப்பு நிறுவனங்களுக்கும் (music publisher and music production house) தகவலை அனுப்பி விடுவார்கள். வார்னரில் (Warner) நான் இருந்தபோது க்லேடியேட்டர் (Gladiator) படத்திற்கான் இசையமைப்பாளர் தேர்வு நடந்தது. எங்களுக்கு ஒரு தொலைநகல். அதில் சுருங்க அந்தப் படத்தின் கதை. பிறகு அவர்களுக்குத் தேவைப்படும் இசை என்ற குறிப்பில் 180 A.D காலத்தைய ரோமை (Rome), போர், விழாக்கள் என்ற அன்றைய ரோமின் முக்கியமான அடையாளங்களுடன் பிரதிபலிக்கும் இசை. அதற்கு இசை பதிப்பு நிறுவனங்கள் சில சாம்பிள்களை (Samples) அல்லது Demo வை அனுப்பவேண்டும். ஹன்ஸ் ஜிம்மர் (Hans Zimmer)ஆகட்டும் ஜோன் வில்லியம்ஸ் (John Williams) ஆகட்டும் இந்த சுழற்சிக்குள் அடங்கியாக வேண்டும்.

திரைப்படம் போஸ்ட் பொரோடக்ஷ்னுக்கு (post production) தயாரானதும், கதையின் மைய உணர்வுக்கும் நகர்வுக்கும் தேவையான அனைத்து இசையும் பதிவு செய்யப்பட்டும் விடும். அதற்கு விதிவிலக்காக அமைந்தது டார்க் நைட் (Dark Knight) படம். படம் காட்சிபடுத்தப்படும் முன்பே இசை பதிவு செய்யப்பட்டு விட்டது. இசை கதாப்பாத்திரத்தின் உளவியலை மட்டும் சார்ந்திருக்கும். அந்த இசையை திரைகதையின் ஒரு கூறாக பயன்படுத்தி காட்சிகளை எடுத்தார்கள்.

இப்பொழுது நாம் வழக்கமான ஹலிவூட் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். உதாரணத்திற்கு சலம்டாக் மில்லினியரை எடுத்துக்கொள்வோம். முக்கியமாக அது வாழ்வின் அவலத்தை பற்றிப் பேசும் படம் அல்ல, வறுமையையும், ஏமாற்றத்தையும் பற்றி பேசுவதல்ல. ஏ ஆர் ரஹ்மானும், அதன் இயக்குனர், இந்த படத்தின் இசையை தீர்மானிக்கும் போது ஒன்றில் மட்டும் தீவிர தெளிவுடன் இருந்தார் என்று கூறியிருக்கிறார். அதாவது எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் நெகடிவ் உணர்வுகளை இசைத் தரக்கூடாது என்பது. அந்தப் படத்தைப் பாருங்கள் வறுமையைக் காட்டும் போதும், பிச்சைக்காரர்களைக் காட்டும் போதும், நம் கண்கள் கலங்கும் எந்த காட்சியிலும் இசை இருப்பதில்லை. முக்கியமாக ஒரு சிறுவனின் கண்களில் காச்சியத் திரவத்தை ஊற்றும் போது கூட இசையில்லை. ஆனால் மையக் கதாப்பாத்திரத்தின் அடுத்தக் கட்டத்திற்கான ஒவ்வொரு நகர்வின் போது, எதிர்பார்ப்பை நோக்கி அவன் முன்நகரும் ஒவ்வொரு காட்சியின் போதும் இசையிருக்கும். குறிப்பாக சுரங்கப்பாதையில் கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சிறுவன் பிச்சையெடுக்கிறான். அந்த சோகம். அவன் முன்னமே தன்னுடன் சிறுவயதில் இருந்த சிறுவன். வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறான். எதிர்காலம் அற்று நிற்கிறான். இவன் அவனுக்கு 100 டாலர் கொடுக்கிறான். இவன் லதிகாவைப் பற்றி கேட்கிறான். அவனும் விவரங்கள் தருகிறான். இவன் ஓடுகிறான், அவளைத் தேடி. அவன் ஓட ஆரம்பித்தபோது இசை வருகிறது. துள்ளலான இசை. ரிங்ரிங்ரிங் ரிங்ரிங் என்று தொடங்கும், பாலியில் தொழில் புரியும் ஒருவளின் மனநிலையை பிரதிபலிக்கு பாடல். ஏ ஆரின் அதே பாணியில் ஏற்கனவே வெளியான ஒரு பாடல், முத்து முத்து மழை முத்தாடுதே. அதிலும் முக்கியமானது இந்தியாவின் இசை ஆன்மா எங்கும் தெரியக்கூடாது மாறாக நவீன இளைஞர்களின் மனநிலைதான் அதன் திரை இசையில் தெரியவேண்டும்.

இந்தப் படத்தில் இசை கையாளப்பட்டிருக்கும் விதம் எல்லா ஹலிவூட் திரைப்படத்தைப் போல் எண்ட் கிரேடிட் (End Credit) அல்லது ஒபென் கிரேடிட் (Open Credit) என்ற வகையிலேயே, அதாவது ஒரு காட்சியின் தொடக்கமாக அல்லது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு நகரும் போது மட்டும் இசை பயன்படுத்தப்படும். இடைப்பட்ட சூழலில் இசை தேவையற்றதாக கருதப்படும். அதுவே இது ஒரு தமிழ் திரைப்படமாக இருந்தால் ஏ ஆர் ரஹ்மானின் இசை எப்படி இருந்திருக்கும். இந்தி படமாக இருந்தால் அவரின் இசை எப்படி இருந்திருக்கும் என்பதுதான் விவாதமாக இருக்க முடியுமே தவிர, நான் கடவுளின் இசை ஏன் இங்கு ஒப்பீட்டுக்கு வரவேண்டும்? மேலை கலாச்சாரத்தில் அழுவதற்கென்று இசை பயன்பட்டத்தில்லை. அவர்களது திரைப்படத்தில் நமது கண்கள் நனையும் எந்தக் காட்சியிலும் இசை இருந்ததில்லை. அப்படியிருந்தாலும் மெல்லிய பியானோ இசை மென்ணுர்வுகளை இசைத்துக்கொண்டிருக்கும். இசை அவர்களது காவியங்களில் ஒரு பூடகத்தன்மையுடன்தான் இருக்கும். உணர்வுகளை துல்லியமாக அடையாளப்படுத்தாது.

இன்னொரு விஷயம் அங்கு எந்தக் காட்சிக்கு எந்த இசை எவ்வளவு நேரம் பயன்படவேண்டும் என்று தீர்மானிப்பவர் இசையமைப்பாளர் அல்ல, மியூசிக் சுப்பவைசர். அவருடைய முக்கிய வேலையே காட்சிகளுடன் இசையை பொருத்துவது. ஏ ஆர் ரஹ்மானின் சமீபத்திய ஹலிவூட் திரைப்படமான Couples Retreat யை எடுத்துக்கொள்வோம். அவரது சவுண்ட்ரெக் (Soundtrack) இசைதொகுப்பில் உள்ள இசையில் பத்து சதவிகிதம் மட்டுமே அந்தத் திரைப்படத்தில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. முக்கியமாக ஆறு இடத்தில் அவர் இசை பயன்படுத்தப்பட்ட ஞாபகம். ஒன்று விடுதியின் நுழைவாயிலை காட்டும் காட்சி, அம்மணமாக்கப்படும் காட்சி. சுறா மீன் காட்சி, படகு பயணத்தின் போது ஒரு பாடல், நீர்வீழ்ச்சியை காட்டும் போது. அனைத்து காட்சிகளிலும் இசை 30 செகெண்டுகளுக்கு மேல் போகாது. இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்தக் கதை நகர்விற்கு முக்கியப் பங்கு வகிக்கும் காட்சிகள். அது தவிர பல்வேறு இசையும் பாடல்களும் அந்தப் படத்தில் இருக்கும். அவை அனைத்தும் ஏ ஆரின் இசை அல்ல. மியூசிக் சுப்பவைசர் இந்த இசைகளை தேர்வுச் செய்து எந்தக் காட்சியில் எந்த இசை தேவைப்படும் என்று முடிவுப் பண்ணி அதைப் பொருத்துவார். காட்சிகளோடு இசையை பொருந்தச் செய்வதுதுதான் அவருடைய வேலை.

அது தவிரப் பெரும்பாலான உணர்வுகளையும் காட்சியையும் அவர்கள் சவுண்ட் டிசைனிங் மூலம் விளக்க முயற்சிப்பார்கள். வாழ்வின் யதார்த்தங்களை திரையில் கொண்டுவருவதுதான் அதன் நோக்கம். நாம் ஒரு உணர்வுக்குள் அகப்பட்டு கொள்வதும், ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொள்ளவும் நமது யதார்த்த வாழ்வில் இசை காரணமாக இருப்பதில்லையே. நீங்கள் அழும்போது நமக்கு எதாவது இசை கேட்கிறதா என்ன? அதனால் திரையில் இசை அந்த பங்கை செய்யும் என்றால், அது யதார்த்தச் சினிமாவாக இருக்காது. பார்த் (Bart) போன்ற ஆய்வாளர்கள் திரை இசை கேட்பதற்காக அல்ல அது திரைக் காட்சியின் ஒரு ஒலி வடிவமாகத்தான் இருக்கிறது என்கிறார். அல்லது திரை காட்சியை அடுத்த பிரேமுக்கு நகர்த்தும் ஒரு கருவியாக பயன்படுகிறது என்கிறார். ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்கு அல்லது அந்த பாத்திரத்தின் உணர்வுகளுக்கு இசைத் தேவைபடும் என்றால் அது உளவியல் ரீதியான அணுகுமுறையில் தான் இருக்குமே தவிர அப்பட்டமான இசைவழி மொழிபெயர்ப்பாக இருக்காது. அதனால்தான் உலக சினிமாக்களில் இசை என்பது மிகக் குறைவாக இருக்கும், யதார்த்தங்களிலிருந்து விலகாமல் இருக்க. பெரும்பாலும் ஒலி வடிவமைப்பில் யதார்த்த சூழலை கொண்டுவர முயற்சிப்பார்கள். இந்த ஒலி வடிவமைப்பின் வழி காட்சியை உணர்வுகளாக மொழிபெயர்ப்பவர் சவுண்ட் டிசைனர் அல்லது சவுண்ட் எடிட்டர்.

யதார்த்தமான சினிமா, முடிந்தளவு இசை இல்லாத சினிமாதான் அவர்களின் கனவு என்றுகூட சொல்லலாம். அதையும் நோ கண்ட்ரி ப்போர் ஒல்ட் மேனில் (No country for an old man) சாதித்திருக்கிறார்கள். சினிமாவின் போஸ்ட் பொரோடக்க்ஷன் வேலையில் மியூசிக் சுப்பவைசர், சவுண் டிசைனர், எடிட்டர், இயக்குனர், இசையமைப்பாளர் எல்லோரும் சேர்ந்து, இசை எங்கு எவ்வளவு நீளத்தில் இருக்கவேண்டும், எவ்வளவு வெளிப்பட வேண்டும், இசையின் ஒலி அளவு எவ்வளவு இருக்கவேண்டும். அல்லது இசை effect ஆக மட்டுமே கேட்கப்பட வேண்டுமா அல்லது இசையாக கேட்கப்பட வேண்டுமா என்றெல்லாம் இந்த போஸ்ட் பொரோடக்க்ஷனில் முடிவு செய்யப்படும். ஆனால் இந்திய சினிமாவில் இசையமைப்பாளரிடம் படம் அதன் இறுதி நிலையில் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டு விடும். இன்னொரு அபத்தம், effect யையும் இசையமைப்பாளரே சில சமயங்களில் தனது இசையமைப்பின் வழி தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

இளையராஜாவின் சமீபத்திய படமான ‘பா’வை பார்ப்போம் அதில் ஒர் இறுதி காட்சி. அந்தப் பையன் இறக்கப் போகிறான், தனது தந்தைக்கும் தாயிற்கும் திருமணம் நடத்துகிறான், திருமணத்திற்கு தீயை சுற்றிச் சுற்றி நடப்பதுபோல், அவர்கள் அவனது படுக்கையைச் சுற்றி சுற்றி நடக்கிறார்கள், அவனது பாட்டி திருமண மந்திரம் சொல்கிறாள். பையன் மன நிறைவு கொள்கிறான். தந்தையின் முகத்தில் சோகம், இப்பொழுதான் பழகியிருக்கிறான் அதுவும் தனது மகன் என்று தெரியாத நிலையில். தெரியும் போது பையன் மரண படுக்கையில், அந்த சமயம் அவன் ‘பா’ என்கிறான். தந்தையின் முகத்தில் சந்தோஷம், ஏமாற்றம், விரக்தி. சற்று நேரத்தில் பையன் இறக்கிறான். ஒரு சில நிமிட சம்பவங்கள் அனைத்தும். இந்த அத்தனை உணர்ச்சிக்கும் இளையராஜா இசை வடிவம் கொடுத்திருப்பார். ஒவ்வொரு சின்னச் சின்ன உணர்ச்சிக்கும். மந்திரங்கள் உச்சரிக்கும் போது, தந்தை கவலையாகப் பார்க்கும் போது, சட்டென்று பையன் பா என்று சொல்லும் போது (முதல் முறையாக அவன் வாழ்வில் அவன் உச்சரிக்கும் வார்த்தை, அவன் தந்தை முதல் முறையாக அவனது வாழ்வில் கேட்கும் வார்த்தை) நமது கலாச்சரத்திற்குப் பழக்கப்பட்ட வயலின் நாதம் அந்த இடத்தில் ஒலிக்கும், உடனே அந்த இசை சற்றென்று தடம் மாறுகிறது காரணம் அவன் இறக்கிறான். மிகச் சிக்கலான இசைக் கலவை.

உயர் ரசனையில் இதைப்பார்த்தால் நிச்சயம் இசையை இங்கு இரைச்சலென்பார்கள். இளையராஜாவிற்கு இசையமைக்கத் தெரியவில்லை என்றுகூட சொல்லலாம். வட இந்தியாவிலும் பலரும் இதைதான் ஒருவேளை சொல்லக்கூடும். ஹே ராம் படத்தின் பின்னனி இசைக்கும் இதுதான் நடந்தது. காரணம் இங்கு என்ன இசை வந்திருக்க வேண்டும்? அவன் தனது பையனை வந்து பார்க்கும் போது நிசப்தம் அல்லது மெல்லிய, கேட்கப்படாத இசை. பாட்டி திருமண மந்திரம் சொல்லும் போது அவரது குரல் மட்டுமே கேட்கவேண்டும், இசை வடிவில் மந்திரங்கள் அல்ல, பிறகு அனைத்து காட்சிகளும் நிசப்தத்தில். அந்த சுழலையும் உணர்வுகளையும் விளக்க நிசப்தத்தை தவிர வேறு இசை காரணமாக இருக்கவே முடியாது. அந்தப் பையன் பா என்று சொல்லும் போது அவனது குரலை தவிர வேறு உயர்ந்த நாதம் எதுவாக இருக்க முடியும். பிறகு அவன் இறக்கும் போது அவனது நாடி நின்றுவிட்டதின் அடையாளமாக நாடி இயக்க சாதனத்தின் டீன் என்ற நீண்ட ஒலி மட்டும் கேட்கப்பட வேண்டும்.

ஆனால் சர்வ நிச்சயமாக எந்த இசையமைப்பாளரும் இதை நிர்ணயிக்க முடியாது. ஹலிவூட் சினிமாவிலும் உலக சினிமாவிலும் இசையமைப்பாளர் இசை அமைத்தப்பிறகுதான் மற்ற வேலைகள் நடக்கும். மற்ற ஒலி அமைப்பு சார்ந்த அத்தனை விஷயங்களும் பிறகுதான் அரங்கேறும். அல்லது மியூசிக் சுப்பவைசர் இந்த காட்சிக்கு இதுதான் தேவை என்று இசையை எடிட் செய்து விடுவார். பிறகு எது கேட்கப்படவேண்டும் எது கேட்கப்படக்கூடாது என்பது சவுண் டிசைனிங் முடிவு செய்யும், பிறகு இசையின் ஒலி அளவு எவ்வளவு இருக்கவேண்டும் என்பது மின்சிங்கில் (Mixing) முடிவு செய்யப்படும். இறுதியில் நீங்கள் பார்க்கப்போவது சர்வதேச தரத்தில் ஒரு காட்சியை அதற்கு தேவையான இசையுடன். ஆனால் இந்திய சினிமாவில் மட்டும்தான் இறுதி கட்டவேலையாக இசை வேலை நடக்கிறது. திரையில் பார்த்து, காட்சிக்குக் காட்சி இசையமைக்கும் நிர்பந்தம். அதுவும் சில சமயங்களில் ஒலி வடிவமைப்பையும் இவர் நிறைவு செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படும். இந்திய திரை ப்படத்தின் எல்லா பலவீனங்களையும் இளையராஜா தனது இசையால் சரி செய்ய முயற்சிக்கிறார் என்று நான் சொல்லமாட்டேன். அதை முழுவதும் உங்களுடையப் புரிதலுக்கு விட்டுவிடுகிறேன்.

ஆனால் இதையெல்லாம் மீறி இளையராஜாவின் இசையைப் போற்ற ஒரே காரணம் ‘பா’ வின் தீம் இசை. இந்தியாவிலேயே படத்தின் மைய கருவிற்கும், கதாபாத்திரத்திற்கும் ஓர் இசையை தீர்மானித்து அதை படம் முழுவதும் வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தும் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா. இதிலும் பாவின் தீம் இசை ஆனந்தமாக, துள்ளலாக, சோகமாக என்று அந்த கதாபாத்திரத்தை சுற்றியே இருக்கும். இத்தகைய இசையை திரையின் ஆன்மா என்று கூறலாம். இசை ஒரு தனி கதாபாத்திரமாக அல்லது உளவியல் அம்சமாக ஒலித்துக்கொண்டிருக்கும். Ennio Morricone, John Williams, James Horner இசையமைப்பில் இத்தகைய கூறுகளை நாம் பார்க்கலாம். ஏ ஆர் ரஹ்மானும் அவரது அழகிய தமிழ் மகன் படத்தின் இசைக் குறித்தப் பேட்டியில் இதை சொல்லியிருப்பார். இளையராஜாவின் பின்னனி இசையில் ஒரு மெய்ன் தீம் (Main Theme) படம் முழுக்கவும் இருக்கும், கதாபாத்திரங்களையும் இசையை கொண்டே வித்தியாசப்படுத்தி காட்டுவார் ராஜா என்று.

அடுத்து இளையராஜாவின் திரைப்படத்திற்கான பாடல்கள். காட்சிக்கு தேவையான பாடல்களாகவே இருக்கும். அதை தவிர்த்த இசை ரசனையில் அது செயல்படாது. இதை பா படத்தின் பாடல்கள் பற்றிய வட நாட்டு விமர்சனங்கள் அனைத்திலும் கூறிவிட்டார்கள். இங்கு இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நான் கடவுளில் வரும் செயற்கையான சினிமா பாடல்கள் இயக்குனரின் வேண்டுகோள். அந்த பாடல் பழைய சினிமா பாடல்களாகவும் அது செயற்கையாகவும் இருப்பதற்கான இயக்குனரின் கருத்தியல் [b]தேவையை ஜெயமோகன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

Couples Retreat சவுண்ட் ட்ரெக்கை கேட்டுவிட்டு படத்தை பார்த்தால் இத்தனை அம்சங்களும் உங்களுக்கு புரியும். இந்திய சினிமாவின் நிலையை வைத்து இளையராஜாவின் இசையை மதிப்பிடுவது என்பது எத்தனை அபத்தமானது என்றும் கூட. சில தொழில் நிர்பந்தங்களும், நமது சினிமாவை நமது தயாரிப்பாளர்களும், இயக்குனரும் ரசிகர்களும் அணுகுவது இன்னமும் இந்த இசை தளத [/b]

இளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில... 0

senthilkumaran | 9:35 PM |


இளையராஜாவின் திருவாசகம் ஆறு பாடல்கள் கொண்ட தொகுப்பு. குறுந்தகடோடு இளையராஜா தன் கையால் எழுதிய திருவாசகப் பாடல் வரிகள் கொண்ட ஒரு புத்தகம் கிடைக்கிறது. மிக அழகாக அச்சடிக்கப்பட்ட இந்தக் கையேடு, பாடல்களைக் கேட்கும்போது கூடப் படிப்பதற்கு இலகுவாய் உள்ளது.

திருவாசகத்தில் உள்ள சிவபுராணம், திருவெம்பாவை, திருச்சதகம், திருவம் மானை போன்ற பகுதிகளையெல்லாம் முழுவதுமாகப் பாடாமல், இளையராஜா இவற்றிலிருந்து சில பாடல்களை மட்டும் எடுத்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்கள், திருவாசகத்தின் சாரத்தை அளிக்கக்கூடியவையாக இருக் கின்றன. மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய பாடல்கள் சில, அகராதியைப் புரட்ட வைக்கின்ற பாடல்கள் சில, அகராதியைப் புரட்டினாலும் அர்த்தம் புரியாதவை சில.

பாடல்களை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாட, அவர்களுக்கு பின்புலமாக இருப்பது ஹங்கேரிய ஆர்க்கெஸ்ட்ராவின் இசை. 84 பேர் கொண்ட குழு தரும் இசை பல இடங்களில் பிரம்மாண்டமாகவும், தேவையான இடங்களில் மெதுவாக வருடுவது போலவும் உள்ளது. இந்தக் குழு தவிர ஆங்காங்கே சாரங்கி போன்ற இந்திய வாத்தியங்களின் இசையும் கேட்கிறது. தனியாகக் கேட்டால் பாடப்படுவது கர்னாடக சங்கீத அடிப்படையில் இருப்பது போலவும், பின்னணி இசை மேற்கத்திய சங்கீத அடிப்படையில் இருப்பது போலவும் இருக்க, அவற்றை ஒன்றாகச் சேர்த்து ஓர் ஆழமான அனுபவத்தைக் கொடுத்திருப்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு. மேற்கத்திய சங்கீத விதிகளிலேயே அடைபடாமல் தென்னிந்திய மரபுமுறையில் பாடல்களைத் தமிழிலேயே வழங்கியிருக்கிறார் ராஜா. அவருக்குப் பக்கபலம் ஆங்கிலப் பாடகர்களும், பவ தாரிணி, உன்னிகிருஷ்ணன் போன்றவர்களும். ஆங்கில வரிகளை ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதியிருக்கிறார். ஆங்கில வரிகள் இரண்டாவது பாடலில் மட்டும் வருகின்றன.

ஆறு பாடல்கள் பல்வேறு ராகங்களின் சாயல்களும் பல்வேறு உணர்வுகளைப் பிரதி பலிக்கும்படியாகவும் இருக்கின்றன. கலிப்பாக்களையும் விருத்தங்களையும் அவற்றின் அர்த்தம் அறிந்து பிரித்துப் பாடியிருக்கிறார்கள். மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, கடவுளை எண்ணி உருகுதல், சிவனோடு ஐக்கியம் ஆவது பற்றி என்று பல நிலைகளை இசை தொடுகிறது. ராஜாவின் குரல் ஆங்காங்கே உருகுகிறது, சுருதியை விட்டு விலகுகிறது.
இதில் இரண்டாவது பாடல் தான் இத்தொகுப்பின் முக்கியப் பாடல். ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு மேல் செல்லும் இந்தப் பாடல், ஓர் அற்புதமான வடிவமைப்பு. "பொல்லா வினையேன்!" என்று ராஜா தழுதழுக்க ஆரம்பிக்க, ஆங்கிலத்தில் "I'm just a man, imperfect lowly!" என்று மேற்கத்திய முறையில் பாட, ஆர்க்கெஸ்ட்ரா இசையும் குழுவினரின் "நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!"வும் பின்னணியில் ஒலிக்க, மெதுவாக இசை மிகுந்து உச்சத்திற்கு சென்று முடிகிறது.

ஐந்தாவது பாடலை மட்டும் இளையராஜா பாடாமல், உன்னிகிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், மஞ்சரி, ஆஷா குழுவினர் பாடியிருக்கின்றனர். "பூவேறு கோனும் புரந்தரனும்" என்று ஆரம்பிக்கும் திருக்கோத்தும்பி பாடலை இளையராஜாவுடன் பவதாரிணி பாடியிருக்கிறார். ஆறாவது பாடலான "புற்றில்வாள் அரவும் அஞ்சேன்" கேட்டவுடன் ஈர்க்கும் மெட்டுடையது. மேற்கத்திய இசையை ரசிப்பவர்கள் இளையராஜாவின் ஆர்கெஸ்ட்ரேஷனை விரும்பிக் கேட்பர். கர்நாடக இசையை விரும்புபவர்கள், இந்தப் பாடல்களில் இருக்கும் மாண்டு, திலங்க், சுத்த தன்யாசி ராகங்களைப் புதிய கோணங்களில் பயன்படுத்தியிருப்பதை ரசிப்பர்.

’How to name it’ - இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி 0

senthilkumaran | 7:38 PM |



இளையராஜாவின் வாத்திய இசைத் தொகுப்பான ‘எப்படிப் பெயரிட’(How to Name It) இசை ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இணைய குழுக்களும், இசை ரசிகர்களும் இதை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என இன்றளவும் மதித்து வருகிறார்கள். கல்லூரி விழாக்களிலும், தனிப்பட்ட தொகுப்புகளிலும் பின்னணி இசையாக இத்தொகுப்பின் இசையை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சோக கீதம், துள்ளலான இசை எனச் சிறு பகுதிகளாக இத்தொகுப்பின் சரடுகள் இசை ரசிகர்களின் ஞாபகத்தில் இன்றும் நிறைந்துள்ளன. என் நண்பர்களில் பலர் இப்பாடல்களில் பகுதிகளை மனப்பாடமாகப் பாடுவதை கேட்டிருக்கிறேன். பல நிகழ்வுகளின் ‘மூட்’ உருவாக்கும் இசையாக ‘எப்படிப் பெயரிட’ தொகுப்பு இன்றும் தமிழகத்தில் ஏதாவதொரு மூலையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், வெளியான கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இத்தொகுப்பு பற்றி பதியப்பட்ட விமர்சனங்களை ஒரு கையளவில் அடக்கிவிடலாம். அங்கொன்று இங்கொன்றாகத் தகவல்கள் பதியப்பட்டிருக்க, புது ரசிகர்கள் தெளிவில்லாத விமர்சனங்களால் குழப்பமடையக்கூடிய நிலை உள்ளது. இப்போது, நாம் ஒற்றை வரியில் மதிப்பீடுகளை அள்ளித் தெளிக்கும் காலத்தில் இருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளாய் பெரும்பான்மையான விமர்சனங்கள் ட்விட்டர் பாணியிலேயே பதியப்பட்டிருக்கின்றன. எழுதப்பட்ட கட்டுரைகளும் தெளிவில்லாத சித்திரத்தை மட்டுமே நம்முன் வைக்கிறன. பல சங்கம (Fusion) இசைத் தொகுப்புகள், குறிப்பாகத் தமிழ் மையம் வெளியிட்ட Mozart meets India போன்ற தொகுப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த இத்தொகுப்புக்கு நடுநிலையான விமர்சனங்கள் உருவாகாத நிலை இன்றும் இருப்பது வேதனையானது. வெளியான காலகட்டத்திலிருந்து இன்றுவரை இருக்கும் சில முக்கியமான விமர்சனங்களையும், அவை முன்வைத்த கேள்விகளையும் மறுபரிசீலனை செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

எல்லா நாட்டிலும் கலைஞர்கள் இயங்கும் துறைக்கு வெளியே அவர்களின் ஆளுமைகளை விமர்சிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலைக்கு வெளியே நடக்கும் விவாதங்களுக்கு அதிகமாகத் தீனி போடுவதும் இவைதான். இப்படிப்பட்ட விமர்சனங்களை மீறியே ஒரு கலைஞன் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்களும், அதன் வழியே எழும் விவாதங்களும் பெரும்பாலும் இந்த அளவிலேயே நின்றுவிடுகின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள், இளையராஜாவின் ஆளுமையை மட்டும் கருத்தில் கொண்டுள்ளன. இளையராஜாவின் இசைப் புரட்சி பற்றிய விமர்சனங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. அவர் நிகழ்த்திய இசைச் சாதனைகளை ஒதுக்கிச் செல்லும் நிலை பரிதாபமானது. இணையத்தில், தனிப்பட்ட குழுக்கள் மட்டுமே இளையராஜாவின் இசை குறித்த விவாதங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. பல சமயங்களில் அவை எங்கும் பதியப்படாமல் காற்றில் கரைந்துவிடுகின்றன.

கிராமிய இசைப் பாணி, கர்நாடக சாஹித்தியங்கள், மேற்கத்திய செவ்வியல் முறைகள் மூன்றையும் சரியான கலவையில் இணைத்து இனிமையான பாடல்களாகக் கொடுத்தது இளையராஜா செய்த அபாரமான சாதனை. இசையின் சட்டகத்தினுள் இருந்த எண்ணிலடங்கா சாத்தியங்களை இவர் பாடல்கள் திறந்து காட்டின. பலர் இளையராஜாவின் திரையிசை மூலம், கர்நாடக சங்கீத நுணுக்கங்களை எதிர்ப்பாதையில் சென்றடைந்தது வேறெங்குமே நடக்காத மாற்று நிகழ்வுகளாகும். பல ராகங்களை திரைப்பாடல்களில் கையாண்ட இவரின் பாண்டித்தியத்தைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம். மேலும், ஒரு குறிப்பிட்ட இசைப் பாணியை மட்டுமே திரையிசையில் நிகழ்த்த முடியும் என்ற கருத்தை மாற்றி, பின்ன்ணி இசையைத் தமிழ்ப் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரமாகவே ஆக்கிய சாத்னையும் இவரது.திரையிசை வட்டத்தைத் தாண்டி 1986 ஆம் ஆண்டு மே மாதத்தில், ‘ எப்படிப் பெயரிட ‘( How to Name it) என்ற இசைத் தொகுப்பை இளையராஜா வெளியிட்டார் (இதில் பிரதான வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன். கடந்த வருடம் இவர் ராகசாகா என்ற சங்கம இசைத் தொகுப்பை வெளியிட்டார்). இன்று, திரைப்பட இசை வெளியிடுவது ஒரு பிரம்மாண்டச் சடங்காக மாறியுள்ளது. யூ ட்யூப் முதல் பல வலைத்தளங்களில் ஒளித்தொகுப்புகளாகவே இவை நமக்குக் கிடைக்கின்றன. 1986 ஆம் ஆண்டு ‘எப்படிப் பெயரிட’ இதே போல் ஒரு பொது அரங்கில் வெளியானது. ஆனால், இன்று அந்த வெளியீட்டு விழா பற்றி துணுக்குச் செய்திகள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன; ஒரு புரட்சிகரமான தொகுப்பாக இந்திய அளவில் அது கவனிக்கப்படவில்லை. ஒரு அகழ்வாராய்ச்சி போல் தேடினால் மட்டுமே சிதிலங்களாய் ஒரு சில விவரங்கள் கிடைக்கின்றன. அவை முழுமையான பார்வையை கொடுப்பதில்லை.அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. (முழுக் கட்டுரையை கடைசியில் இணைத்திருக்கிறேன்.) இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.

மேற்கிசை உலகில் நடந்த ஒரு நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப்பார்க்கலாம் - May 29, 1913 ஆம் ஆண்டு ‘The Rite of Spring’ எனும் நடன-இசை பாரீஸில் கூச்சல், அடிதடிக்கிடையே அரங்கேற்றம் ஆனது. இன்றும்,அது உருவாக்கிய அதிர்வலைகளை ஆச்சர்யத்துடன் இசைக் கலைஞர்கள் நினைவு கூறுகிறார்கள். இந்த இசை இருபதாம் நூற்றாண்டை வரவேற்ற நவீன மேற்கிசைப் பாணியாக எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி பற்றி பலவிதமான ‘கதை’களும் உருவானது. பார்வையாளர்கள் மத்தியில் ஹிட்லரும் இருந்தார் என்பது அதில் புகழ் பெற்றக் கதை. இப்படியாக, ஒரு நிகழ்வைத் தொகுப்பதோடு மட்டுமல்லாமல் (வெளியான தேதி, நேரம் உட்பட), விழாவில் கலந்துகொண்டவர்கள், இசை நுட்பங்கள், அதன் கதைகள், கட்டுக்கதைகள் எனத் தொகுக்கும் வழக்கம் மேற்கிசை உலகில் உள்ளது.

The Rite of Spring இசையில் உள்ளது போன்ற ஆழமான இசை நுட்பங்கள் இளையராஜாவின் எப்படிப் பெயரிட’ இசைத்தொகுப்பிலும் உண்டு. அதேபோல், இத்தொகுப்பில் கறாரான கர்நாடக மரபுகளுக்கு உட்பட்டவை தவிர மரபை மீறிய இசையும் உள்ளது. `

சுஜாதா, 1990ஆம் ஆண்டு மார்ச் மாத கணையாழியின் கடைசி பக்கத்தில் - `இளையராஜாவின் How to Name it ,It is Only Wind (Nothing But Wind தொகுப்பை இப்படிக் குறிப்பிடுகிறார்) போன்ற வினோதப் பெயர்களுடன் ஸிம்பொனியையும் சிம்மேந்திரமத்திமத்தையும் ஒட்ட வைக்க பெரும்பாடு பட்டாலும் கேட்கும்போது திட்டு திட்டாகத்தான் இருக்கிறது. சங்கராபரணம் ஒரு மேஜர் ஸ்கேல் என்றும் கீரவராளியோ ஏதோ மைனர் ஸ்கேலுக்கு சமானும் என்றும் ப்ரொபஸர் ராமநாதன் சொல்லியிருக்கிறார். இருந்தும் இரண்டையும் இணைக்கும் முயற்சிகள் வெள்ளைக்காரிக்கு தலைபின்னி பூ வைத்தாற் போகத்தான் அசம்பாவிதமான இருக்கின்றன. காரணம் , இரண்டும் அமைப்பில் அஸ்திவாரத்தில் வேறுபட்டவை. மேஜர், மைனர் என்பது ராகங்கள் அல்ல. அவை ஸ்வரங்களுக்கு இடையே ஆன ஒருவித பிணைப்பு, அல்லது உறவுமுறை` என இசையமைப்பாளர்களுக்கு பாடம் எடுக்கும் விதமான விமர்சனத்தை முன்வைத்தார். இப்படிபட்ட தன் வயப்பட்ட கருத்துகள் இத்தொகுப்பின் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தத் தவறியது.

இத்தொகுப்பை ரசிக்க சங்கம (Fusion) இசையின் இலக்கணத்தை புரிந்து கொள்வது அவசியம். சங்கம இசைக்கென்று இலக்கணம் எதுவும் இல்லையென்றாலும் அதில் வாத்தியங்களும், ஒலியமைப்பும் கையாளப்படுவதைப் பொறுத்து இரண்டு அமைப்புகளைக் கொண்ட இலக்கணத்தை உருவகிக்கலாம்.

இரண்டு வகையான சங்கம இசைப் பாணிகள் உள்ளன. முதல் பாணியில் - ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத பல ஒலித் துண்டுகள், ஒரே நேரத்தில் இணக்கமாக, இனிமையாக ஒலிக்கும். இது பண்யிணைப் புள்ளி (Counterpoint) பாணியாகும். இது பிரபலமான பலத் தொகுப்புகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பல ஒலிகள் ஒரே நேரத்தில் ஒலிப்பதால் இது செங்குத்தான (Vertical) இசை வடிவம் என்றாகிறது.

அடுத்த பாணியில் - வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கும் வெவ்வேறு இசை வடிவங்கள். ஒரு ஒலித் துண்டு குறிப்பிட்ட நேரம் ஒலிக்கும். இதைத் தொடர்ந்து மற்றொரு ஒலி ஒலிக்கும். இப்படி அடுத்தடுத்து தொடர்சியாக வருவதால், இது கிடைநிலை (Horizontal) வடிவம் என்றாகிறது.

இந்த இரு இசைப் பாணியையும் பயன்படுத்தி, மேற்கத்திய இசையில் பல வடிவங்கள் உள்ளன. சொனாட்டா (Sonata), கான்சர்ட்டோ (Concerto), சிம்பொனி (Symphony), காண்டாடா(Cantata), ஃபூக் (Fugue) போன்ற வடிவங்களில் இவ்விரு வகைகளும் உள்ளன. ஒவ்வொன்றும் பல பிரிவுகள் கொண்டவை. இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி,இனிமையான இசையை கொடுப்பது இவற்றின் பொது அம்சமாகும்.

இளையராஜாவின் இசையின் வேர் ஜான் செபாஸ்டியன் பாக்கின் (Johann Sebastian Bach) இசை பாணியிலிருந்து உருவானது. இவர் திரைப்படங்களிலும் பாக்கின் பாணியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். ஃபூக் அமைப்பில் மேற்கிசையில் முத்திரை பதித்தவர் பாக். முப்பத்துக்கும் மேலான உள்ளமைப்புகளை உடைய ஃபூக், அடிப்படையில் மூன்று பகுதிகளைக் கொண்டது. சில ஃபூக் அமைப்புகள் மூன்றுக்கு மேற்பட்ட பகுதிகளையும் கொண்டிருக்கும். முதல் பகுதியும், கடைசி பகுதியும் ஒரே வகையான ஒலிகளைக் கொண்டிருக்கும்(அவை வேகத்தில் மாறுபடலாம்) . நடுப்பகுதியில் மட்டும் சில மாற்றங்களுடன் ஒலித்து, முதல் பகுதி இசையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். இசைக்கருவிகளின் ஒலியை முறையாக அடுக்கி, அவை ஒலிக்கவேண்டிய வரிசையில் ஒன்றாகக் கோர்ப்பது இசை ஒருங்கிணைப்பாளரின் (Conductor) மிகப்பெரிய சவாலாகும்.

இந்த வடிவத்தை இளையராஜா பல்லாயிரக்கணக்கான திரையிசைப் பாடல்களிலும், பின்ணனி இசையிலும், ஃபூக்கின் பல சாத்தியங்களாக நுழைத்துள்ளார். பண்யினைப் புள்ளி உத்தியை கச்சிதமாக பயன்படுத்தும் இசை பாணியாக ஃபூக் இருப்பதால், பல இசைக் கருவிகளின் சங்கமமும் இங்கு சாத்தியமாகிறது.

திரைப்படத்தின் பின்ணனியில் இருவித வயலின் இசை ஒன்றாகச் சேர்வதும் நடுவே ஒரு இனிமையான குழலோசை ஒலிப்பதும் பண்யினைப் புள்ளியில் சேர்வதால் இனிமையான இசையாகிறது. இவை மட்டும் போதாது. சரியான தொனியில், தேவையான கால அளவில் ஒலித்தால் மட்டுமே இது இனிமையான இசையாகும். இல்லையென்றால் வெவ்வேறு இசையாக தனித்தனியாக ஒலித்து, இனிமையற்றதாக மாறிவிடும்.

‘How to name it’ இசைத்தொகுப்பு வெளியானபின் பல காட்டமான, நிராகரிப்பு தொக்கிய விமர்சனங்கள் முன்வைக்கப்படன. ராஜலகஷ்மி என்பவர் மீட்சி இதழில் எழுதிய ‘இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்’ எனும் கட்டுரை இப்படிப்பட்ட கட்டுரைகளின் ஒரு சான்று. இளையராஜாவின் இசைப் பிரயோகங்களை அளவுகோலாகக் கொள்ளாமல், அரசியல் சார்புகளை மட்டும் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட பல கட்டுரைகளில் இதுவும் சேர்ந்துகொண்டது.

உதாரணத்துக்கு, இந்தக் கட்டுரையில் I met Bach in my house மற்றும் ..and we had a talk பாடல்களில் எந்த புதுமையும் இல்லை, ஏதோ ஒரு இந்திப் பாடலை நினைவூட்டுகிறது என்ற ஒற்றை வரியில் இப்பாடல்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது. ஆனால், உண்மையில் பாக் வழியை பின்பற்றி அமைந்த முத்திரை பாடல்களாக ‘I met Bach in my house’ மற்றும் ‘..and we had a talk’அமைந்திருக்கிறது. இவை இளையராஜாவின் இசையில் வெளிபட்ட பாக்கின் தாக்கத்தை திட்டவட்டமாக நிலைநிறுத்துகிறது. சங்கம இசையின் கருத்தை தெளிவாக உணர்த்தும் இப்பாடல்கள், இவ்விரு இசை மேதைகளின் ராக அலங்காரங்களை அருகருகே நம் கண் முன் நிறுத்துகிறது.நம்மை சந்திக்க வரும் விருந்தாளிகளுக்கு நம் முறைப்படி வரவேற்பு கொடுப்பது வழக்கம். நம் விருந்தாளிக்கு புரியும் மொழியில் பேசினால் மட்டுமே கருத்து பரிவர்த்தனை நடக்கும். இதை மனதில் கொண்டு, இளையராஜா கர்நாடக ராக பாணியில் பாக்கின் புகழ் பெற்ற வயலின் இசை வடிவமான Goldberg variations மற்றும் Bourre in E minor இரண்டையும் நிகழ்த்திக்காட்டுகிறார். `நம் இசை வடிவங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கேளுங்கள்` - என பாக்கை நோக்கி இளையராஜா சொல்வது போல் இந்தப் பாடல் இருக்கிறது.

தொடர்ந்து இக்கட்டுரை இதே போன்ற தட்டையான பார்வையை முன்வைக்கிறது. இதன் உச்சகட்டமாக, Is it Fixed, The Study of Violin, You Cannot be free என்ற பாடல்களில் எந்த புதுமையும் இல்லை , இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களை நினைவூட்டுகிறது என்று சில வார்த்தைகளில் இப்பாடல்களில் நுட்பம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையா? இப்பாடல்கள் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது?

இப்பாடல்கள் மூலம் இளையராஜா உருவாக்க விரும்பும் உணர்வுகள் மிக நுட்பமானவை. இம்மூன்று பாடல்களும் உருவாக்கும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமானவை. இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனாலும்,இந்த மூன்று பாடல்களும் மரபான இந்திய மற்றும் மேற்கிசை வடிவங்களிலிருந்து விலகி உள்ளன. குறிப்பாக, நேர அளவுகள்(தாளங்கள்) மிகச் சுதந்திரமாக கையாளப்பட்டிருக்கின்றன. இச்சுதந்திரம், ஜாஸ் பாணியில் வழுக்கிச் செல்லும் ஒலிகளை உருவாக்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் கறாரான இலக்கணத்தை மீறும் முயற்சிகளைச் செய்திருப்பது , புரட்சிகர இசையாக இன்றும் இதை நிலைநிறுத்துகிறது. பாடல்களின் பெயர்கள் இசையமைப்பாளரின் எண்ணத்தையும், மரபு மீறிய முயற்சியயும் பிரதிபலிக்கவே செய்கிறது.ஒரு குறிப்பிட்ட மேற்கிசை வடிவத்தில் இந்த மூன்றும் பொருந்துவதில்லை. சோதனைப் பகுதிகளாக ஒலிக்கும் இவை சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவை. ஆனாலும், இவை அடிப்படையில் கர்நாடக ராகங்களை மையமாகக்கொண்டு அமைந்த பாடல்கள். அம்மரபுகளை மீறுவதில் உள்ள முனைப்பு பாடலின் அமைப்பிலும் அதன் பெயரிலும் தெரிகிறது.

மேலும், கோட்பாட்டு ரீதியில் இவை இசையின் இரு நிலைகளை உணர்த்துகிறதாகத் தோன்றுகிறது. கர்நாடக சங்கீதத்திலுள்ள கறாரான இலக்கணங்களுக்கிடையே நிலவும் சுதந்திரம் இம்மூன்று பாடல்களிலும் வெளிப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தின் கட்டமைப்பில், மேற்கிசை வடிவங்கள் இணைவதன் மூலம் இச்சுதந்திரத்தின் சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.

இப்படிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு - இதைப் போன்ற இசையை அவர் திரைப்படப்பாடல்களிலும், பிண்ணனி இசையிலும் ஏற்கனவே நிகழ்த்திக்காட்டியுள்ளார். அதனால் பல பாடல்களையும் சிறு துண்டுகளாக இணைக்கும் உணர்வே ஏற்படுகிறது - என்பதாகும். இந்திய இசை வரலாற்றில் இதற்கான பதில் உள்ளது.

கர்நாடக இசை தோன்றிய காலத்திலிருந்து , இந்த டிசம்பர் சீசன் வரை பாடப்படும் பாடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. அடிப்படையில் இந்தப் பாடல்களை பாடகர்கள் வெவ்வேறு விதமாகப் பாடுவர். இதை Rendition - நிகழ்த்துதல், பாடும் பாணி என சுதந்திரமாக தமிழாக்கலாம். திரையிசையில் இளையராஜா உபயோகித்த ராக வெளிப்பாடுகள் இத்தகைய தனி பாணியாகும். ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட ராகங்களை உபயோகித்து இனிமையான பல பாடல்களை உருவாக்கியுள்ளார். பலதரப்பட்ட வாத்தியக்கருவிகளை உபயோகித்து, உறுத்தாத பல இசைத் துண்டுகளை திரைக்கதைக்கேற்ப பிண்ணனியில் இசைத்துள்ளார். குறிப்பாக, கிராமிய இசை, இந்திய மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களை சரியான கலவையில் தன் முதல் படத்திலிருந்து உருவாக்கி வருகிறார். இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் இம்முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் பணியைச் செய்கின்றன.

இத்தொகுப்பின் மையக்கருத்தை அடிப்படையாக்கொண்டு மூன்று பாடல்கள் உள்ளன. இவை இத்தொகுப்பின் மாஸ்டர்பீஸ் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மூன்று பகுதிகளைக் கொண்ட `எப்படிப் பெயரிட` பாடல் ஃபூக் அமைப்பைக் கொண்டது. தெளிவான சிம்மமேந்திர மத்யமம் ராகத்தில் தொடங்கி, சண்முகப்பிரியாவில் கலக்கும் முதல் பகுதி, நடுப் பகுதியில் உள்ள வீணை, வயலின் அமைப்புக்கு அழைத்து செல்கிறது. இரண்டாவது வயலின் ஸ்வரங்களுக்கிடையே குதித்து மேற்கிசை பாணியில் ராகங்களுடன் இணைகிறது.

இத்தொகுப்பிளுள்ள இசையை கேள்வி-பதில் பாணியில் புரிந்துகொள்ளலாம்.சில ஒலிகள் கேள்விகளாய் முன் வைக்கும் இடத்திலிருந்து வரும் புதிய ஒலி பதிலாக மாறுகிறது. இது இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இந்தப் பாடலில் முதன்மை வயலினும், இரண்டாவது வயலினும் கேள்வி கேட்பது போல் உயரச் சென்று ஸ்வரங்களை நிறுத்துகிறது. இந்நிலையில் ஸ்வரங்கள் உருவாக்கு இசை முடிச்சுக்களை உணரலாம். பின்னர் பதில் சொல்லும் வகையில் அடுத்த பகுதி இம்முடிச்சை விலக்குகிறது.

அடுத்தப் பாடலான `Mad Mad Fugue’ சுத்தமான ஃபூக் அமைப்பாகும். இத்தொகுப்பிலுள்ள மற்ற பாடல்களை விட இப்பாடல் தெளிவான கட்டமைப்பைக் கொண்டது. திட்டவட்டமான செவ்வியல் தன்மையான ஃபூக் அமைப்பில், நிகழ்கால வாத்தியக்கருவியான டிரம்ஸ் இணைகிறது. இப்படிப்பட்ட இசைக்கோர்வையின் நிர்வகிப்பு ஒருங்கிணைப்பாளரின் திறமையை வெளிக்கொண்டு வருகிறது. ஸ்வர வரிசையின் (ஸ்வரமாலையின் (Chromatic) ) தேர்வு பிரம்மாண்டமான வடிவமைப்பாக உருவாகிறது. குறிப்பாக, கடைசி ஒரு நிமிடத்தில், வயலினும் டிரம்ஸும் செய்யும் சாகசங்கள், திரைப்பட உச்சகட்ட காட்சி போல வேகமாகச் செல்கிறது. மிகக் கட்டுக்கோப்பான ஃபூக் வடிவத்தில் மின்னல் வேகத்தில் நுழையும் இந்தப் பகுதி, பாடலின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது.

Chamber Welcomes Thyagaraja பாடல் ஒவ்வொரு இசைக்கருவியும் கல்யாணி ராகத்தை விரிவாக கையாள்கிறது. இரண்டாவது பகுதியில் இணையும் மேற்கிசை ஒலிகள், ஒற்றை வயலினுடன் சேர்ந்து கம்பீரமான இசை வடிவமாக மாறுகிறது. தியாகப்பிரம்மம் இப்படியொரு குழு இசை நடக்கும் அரங்கில் நுழைந்தால், அவரை வரவேற்க ஒலிக்கப்படும் வரவேற்பு இசை போல் கம்பீரமாய் முடிகிறது.

இத்தொகுப்பு இளையராஜாவின் இசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமைகளுக்காக படைக்கப்பட்ட விருந்தாகும். தன் இசையின் வேர் இவர்களிடம் தொடங்குவதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார். மேலும், சம்பிரதாயமான இசை வடிவங்களிலிருந்து முற்றிலும் விலக இளையராஜா எடுத்த முக்கியமான முயற்சி. இதில் பல தொழில்நுட்ப புதுமைகளையும் அவர் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார். குறிப்பாக ஷெனாய், பசூன் (Bassoon) போன்ற புதுவித குழற்கருவிகளை உபயோகித்துள்ளார். எந்த புது பாணியும் காற்றிலிருந்து தோன்றுவதில்லை.

கலைஞனுக்குள் எழும் கேள்விகளே கலையாய் வெளிப்படுகின்றது. இளையராஜா எடுத்துக்கொண்டிருக்கும் கரு, முதல் திரைப்படத்திலிருந்து அவருடன் இருந்தவை - குறிப்பாக சங்கம இசை முன்வைக்கும் சவால். இரு இசை வடிவங்களின் சங்கமத்தை, முதல் திரைப்படத்திலிருந்து கையாண்டு வந்தாலும், இத்தொகுப்பு பல எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இதில் முன்வைத்திருக்கும் சவால் இன்றும் இளையராஜாவைத் தொடர்கிறது என்றே நமக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக, You cannot be free, Is it fixed போன்ற பாடல்கள் உருவாக்கிய புதிய இசை பாதைகள், பாக்கின் Goldberg variations போல் இன்றளவும் யாரும் தாண்டிச்செல்ல இயலாத முயற்சியாய் இருப்பதே இத்தொகுப்பின் வெற்றி.

இளையராஜாவின் இசை 0

senthilkumaran | 8:04 AM |


இளையராஜாவின் இசை பற்றிய விமரிசனங்கள் பெரும்பாலும் தன்வயமாக மட்டுமே இருக்கிறது. இசை குறித்து பலவிதமான கருத்துக்களை நாம் பரிமாரிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் நாம் இசைகுறித்துப் பேசுவதாக நினைத்து, இசைக்கலைஞர்களைக் குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். அவை அவரது வாழ்வின் பயணம் குறித்த வியப்பாகவோ, அல்லது அவரது தரப்பை உயர்த்திப்பிடிக்கும் புகழுரையாகவோ அமைந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இசை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக கலைஞர்கள் இருக்கிறார்கள். காலம் அக்கலைஞர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இசைக்கலைஞர்களை தவிர்த்து, இசையை குறித்த விமரிசனம் என்பது சாத்தியமே. கீழே நான் எழுதுவது புறவயமான விமரிசனம் அல்ல. முற்றிலும் தன்வயமானது மட்டுமே.

இளையராஜாவின் இசையை குறித்து பேசும்போது, நான் முக்கியமாக கவனிப்பது அவரது காலத்தைத்தான்.பழங்காலத்து இசையமைப்பாளருக்கு இருந்த ஒலிப்பதிவுக்கருவிகளை கவனித்தால், அவை “மோனோ” கருவிகள். எனவே அவர்கள் பாடலின் மெட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். மெட்டுகளில் அவர்களது மேதமையை காட்டமுடியும். அவ்வளவே. இந்தகாலகட்டத்தில் நுழைந்தவர் இளையராஜா. ஒரு பாடல் எங்கு, எப்படி, எதில் கேட்கப்படும் என்பது மிகவும் முக்கியமானதாக கருதவேண்டும். இளையராஜாவின் தொடக்க காலத்தில் அவரது பாடல்கள் பெரும்பாலும் கூம்பு ஒலிப்பெருக்கிகளிலும், பானைகளில் ஸ்பீக்கர் கட்டியும் கேட்கப்பட்டது. வானொலி தான் மிக முக்கிய வெகுஜன ஊடகம்.

எனவே அவரது பாடல்களில் “பாஸ்” குறைவாகவே எடுபடும். இதனால் தானோ என்னவோ அவர் அதிகமான “ட்ரெபிள்” தரும் வயலின்களை அதிகமாக பயன்படுத்தினார். அந்த ஒலிப்பெருக்கிகளிலும், வானொலியிலும் “மோனோ” வில் ட்ரெபிள்தான் கேட்கும். எனவே அவரது இசையில், “இசை” பிரதானமாகிறது. மெட்டுக்கள் முக்கியமாகிறது.

யேசுதாஸ் ஸ்டீரியோ ரிகார்டிங் கருவிகளை தருவித்தபோது, ப்ரியா திரைப்படத்தில் முதல்முறையாக ஸ்டீரியோ ரிகார்டிங் பயன்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல் தனது ஆளுமைகளை அவர் சற்றே மாற்றிக்கொண்டார். ஸ்டீரியோ கருவிகளை புரிந்து உணர்ந்து இசை கொடுக்கத் துவங்கினார். அப்போதுதான் “டூ இன் ஒன்” என்றழைக்கப்பட்ட டேப் ரிகார்டர் ஒரு சில வீட்டில் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஸ்டீரியோ வந்தது அதன் சாத்தியங்களை பயன்படுத்தி அதை முன்னெடுத்ததில் இவர் தமிழ்த் திரையுலகின் முன்னோடி.

அப்போதும் அவரது ட்ரெபிள் தாக்கம் குறையவில்லையானாலும், பாஸ் கிடாரை பயன்படுத்தி வெற்றிபெற்ற பல பாடல்கள் அப்போது வந்தவையே. எண்பதுகள் இளையராஜாவின் பொற்காலம் அல்லவா? அதற்கு முக்கியக்காரணம் அப்போது கிடைத்த ஒலிப்பதிவுக் கருவிகளும், பயன்பாட்டுக் கருவிகளும் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் இளையராஜாவின் இசையில் பெரிதும் பயன்படுத்தப்படாத, அல்லது முன்னெடுக்கப்படாத ஒன்றாக “பாஸ்” இசையை முன்னிறுத்தி வெற்றி பெற்றவர் ரஹ்மான். பாஸ் தான் அவரது பிரதான ஆளுமை. ட்ரெபிள் குறைவாகவே பயன்படும். ரோஜா படப் பாடல்கள் வரும்போது பெரும்பாலான வீடுகளில் நல்ல இசை கேட்கும் கருவிகள் வந்துவிட்டிருந்தன. அது அவருக்கு மிகப்பெரிய சாதகமான விஷயமாகியது. அப்போது கம்ப்யூட்டர்களும் நன்றாகவே தலைகாட்டத்தொடங்கியிருந்தது

எனவே டிஜிட்டல் இசை ஒரு அலையாக அடித்தது. அப்போது இளையராஜா சிலகாலம் “காணாமல் போன”து போன்ற ஒரு மாயையும் உருவானது. ஒரு நொடி, ரஹ்மானின் இசையை கூம்பு ஸ்பீக்கர்களில் கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்தால் சிரிப்புத்தான் வரும்.

புதிய பரிணாமம் எடுத்துவந்த ஒரு இசையிலும் தனது மேதமையால் மீண்டெழுந்து வந்து காதலுக்கு மரியாதை படத்தில் எழுந்து நின்றார் ராஜா. அது அவரது அடுத்த பரிணாம இசையில் அவரது தொடக்கம் என்று சொல்வேன். அதன் பிறகு அவர் பாஸ், ட்ரெபிள் என எல்லாம் கலந்த இசையை அவரது பாணியில் தந்து இன்னமும் நம்மை கட்டிப்போடுகிறார். இதுதான் அப்ஸலூட் இண்டெலிஜன்ஸ் & ம்யூசிகல் சென்ஸ் என்று சொல்வேன்.

தமிழ் சினிமா இசை, இசைக்கருவிகள், ஒலிப்பதிவு கருவிகள் என்று இளையராஜாவோடே வளர்ந்த ஒன்று. இதில் இளையராஜாவின் மேதமை அவர் மாறிவந்த ஒலி தொழில் நுட்பத்தில் தனது ஆளுமையை நிறுவிக்காட்டியதுதான். அதில் அவர் ஒரு ராட்சசன். அந்தகாலத்தில் இசையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இசையமைத்தனர் அதனால் அவர்கள் குரலுக்கும், இசை மெட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். “கட்டோடு குழலாட ஆட” அல்லது “என்னுயிர்த் தோழி கேளொரு சேதி” பாடலை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்களேன். இசையே தேவையில்லை. குரல் மட்டுமே போதுமானது. ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் அப்படித்தான்.

எந்த ஒரு பாடல் எந்த ஒரு இசைக்கருவியும் இன்றி பாடமுடிகிறதோ, பாடினால் இனிமையாக இருக்க முடியுமோ, அது நல்ல பாடல். இசைக்கோர்வைகள் எல்லாம் அதற்கு ஒரு மேலதிக சுவை. இளமையெனும் பூங்காற்று, சட்டென இந்தப்பாடல் தோன்றியதனால் சொல்கிறேன், போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் இதுபோல இசைக்கருவிகள் இல்லாமல் பாடினாலும் சுகமாக இருக்கும். இவை மெட்டுக்களின் மேன்மை. இது இசையின் அடிப்படை.

தற்போது வரும் பல பாடல்களில் இசையை தவிர்த்துவிட்டுப் பாருங்களேன். உதாரணமாக ரஹ்மானின் பல பாடல்களும், ஹாரிஸின் பல பாடல்களும் சொல்லலாம். இப்போதெல்லாம் கையில் கம்ப்யூட்டர் இருக்கிறது. ஒரு டப்பா குரலைக்கூட (உ-ம்) தேவன், சுரேஷ் பீட்டர்ஸ் மற்றும் பலர் இருக்கிறார்கள். ஹாரிஸுக்கு இன்னும் அதிகப்பிரச்சனை, ராஜா மோனோ,ஸ்டீரியோ, மல்டி ட்ராக் என கைவைத்துவிட்டார்.

ரஹ்மான் பாஸைப்பிடித்துக்கொண்டார்.ஹரிஸு ம் எதாவது புதுமை செய்ய்வேண்டுமே, என்ன செய்வது? ஆணை பெண் குரலிலும், பெண்னை ஆண் குரலிலும் பாடவைத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். எப்போதும் ஆண் தாழ்ந்த சுருதியில் கீழேயும், பெண் அதே சுருதியில் மேலேயும் பாடுவது தான் இருந்திருக்கிறது. இவர் அதை தலைகீழாக்கிக்கொண்டு பிழைத்துவிட்டார். இது இசையில் ஒரு நல்ல நகைச்சுவை.

மெட்டுக்களின் இனிமையில் ஜி.ராமனாதன், கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.வி. என எல்லாரும் ஆளுமைகளை நிறுவிவிட்டிருந்தபோது இசையின் மற்றொரு பரிமானமாக வந்து சேர்ந்த இளையராஜா இசையின் பரிணாமத்துடன் வளர்ந்து இன்று பெரும் ஆலமரம்போல் நிற்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இளையராஜாவின் இசை குறித்து நிறைய பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். வாழ்நாள் முழுவதும்.

இளையராஜா ஏமாற்றப்பட்டாரா? 0

senthilkumaran | 8:00 AM |

ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.

17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். .

இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.

இதில் ரோஜாவின் இசைக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் அப்படி விருது தரும்முன் நடந்த அரசியலை நேற்றுதான் பாலுமகேந்திரா வெளிப்படுத்தினார். அதாவது ரஹ்மான் உயர்வுக்கு நானும் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதை நிலை நிறுத்த அப்படிச்சொன்னாரோ என்னமோ…

சிறந்த இசைக்கான விருது பெற இசையைத் தாண்டி வேறு என்னவெல்லாம் தகுதியாக உள்ளன பாருங்கள்!

எது சிறந்த இசை?

ஒரு சமூகத்தின், பிராந்தியத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பலிப்பதே நல்ல இசை. அது எந்த வயதுக்காரனிடமிருந்து வந்திருந்தால் என்ன?

அந்த வகையில் தேவர் மகன் இசை, வேறு யாருடைய அல்லது எந்தப் படத்தினுடைய இசையுடனும் ஒப்பிட முடியாதது. அத்தனைச் சிறப்பு அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு. தேவர் மகனில் ராஜாவின் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் கண்முன் படக் காட்சிகள் அப்படியே அழகழகாக விரியும்.

ஆனால் ரோஜாவைப் பொறுத்தவரை, பின்னணி இசை அத்தனைப் பிரமாதமில்லை. பாடல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு.

ஆனால் அந்தப் படத்துக்குத்தான் விருது கொடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாலுமகேந்திரா. காரணம், ‘சின்ன பையன் என்பதால் பரிந்துரைத்தேன்’ என்று இப்போது கூறியுள்ளார்.

இசையின் ஜீவன், ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் அந்த இசை உயிரூட்டுகிறது? அந்த இசை படம் பார்ப்பவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்ன… என்பதைப் பார்த்துதான் ஒரு படத்துக்கு விருது தரப்பட வேண்டுமே தவிர, இவர் இளைஞர், அவருக்கு விருது கொடுத்துவிடலாம் என்று கொடுப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அதுவும் விருதுக் குழுவின் தலைவரே இதைச் செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.

இந்த தேசிய விருதினை தவற விட்டதால் ராஜாவின் மதிப்போ தரமோ குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் பெற்ற விருதுகள் மற்றும் வாங்கும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு இசைக் கலைஞரை மதிப்பிடுபவர்கள்தானே இங்கு அதிகம்? ரஹ்மான் பெற்ற இரண்டு ஆஸ்கர்கள்தானே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துள்ளது நம்மையெலலாம்.

அப்புறம் எதற்கு போட்டி, ஓட்டு? இசையமைப்பாளர்களின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விருதுகளை வழங்கிவிடலாமே! அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக திறமைகள் ஓரங்கட்டப்பட்டு, லாபி அல்லது தனி நபர்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் விருதுகளை வழங்குகிறார்களா?

தேவர் மகன் என்ற அந்த நல்ல படத்துக்கு, பல புதிய பரிமாணங்களைத் தந்தது ராஜாவின் இசை. தென் மாவட்ட மக்களின் ஆன்மாவை அப்படியெ வெளிக்கொணர்ந்த காட்சியமைப்புகள் நிறைந்த அந்தப்படத்தை, ராஜாவின் இசை தவிர்த்துப் பார்த்தால் ரசிக்க முடியாது. தேவர் மகனோடு ஒப்பிடுகையில் ரோஜாவின் இசை மிகச் சாதாரணமான ஒன்று (அந்த விருது தனக்கு மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே ஏற்படுத்தியது என ரஹ்மான் கூறியுள்ளதை நினைவுகூரத்தக்கது. )

ஆனால் அந்தப் படம் சிறந்த இசைக்கான தேசிய விருது பெறுவதை, ரஹ்மானுக்காக தடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

என்னதான் செய்தார் அப்படி?

இதோ அவரே நேற்று வெளியிட்ட ரகசியம்!

இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.

பாலுமகேந்திரா மைக்கப் பிடித்தார்.

“நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.

ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.

தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்…”, என்றார் பாலு மகேந்திரா.

இதை என்னவென்று சொல்வது?

ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!

.ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் .

இளையராஜா - பகுதி 2 1

senthilkumaran | 7:52 AM |

1. Songs
———

I like to classify songs as follows. ( I will give an example in the brackets – even though obvious – The songs may not be the best of that kind )

1. Duets ( Kanmaniye Kaadhal Enbathu)
2. Solo songs ( male – Senthaazhm Poovil, female – Maaliyil Yaaro (sathrian) )
3. Sensational songs Duo – Not duets ( Aayiram malargale malarungal)
4. Sensational songs solo – ( Male – Kanavu Kanum Vazhkkai, Female – Raasave Unnai Nan – Thanikkatu Raja)
5. Songs sung in happy mood – converted to pathos later – (Povomaa Oorgolam)
6. Pure pathos in nature ( Female – Sonthamillai Banthamillai – Annakili, Male Unna ninaicen – Aboorva sagothargal, Duo – Kudagumalai – Karagaattakkaaran)
7. Songs designed exclusively for Background music ( Then pandi seemaiyile – Nayagan)
8. Songs designed for sensation later used for Background Music ( Poongatru – Mudal Mariathai)
9. Songs designed for duets later used for background music ( Thalaatuthe vaanam – kadal meengal)
10. Bit songs – (Ae Kuruvi – mudhal mariathai , Sollaal aditha – sinna goundar)
12. Romantic songs – ( Duo – Nila Kaayudhu, Female- Sivarathiri – Michael Madana..)
13. Sexual grievance – Azhagu malar aada – Vaideki Kaththirunthaal
14. Dispute in Marriage – Mandram Vantha Thndralukku – Mounaragam
15. Songs for ceromonies – occations
New year – Sagalakalavallavan – tiil the best and immortal
Puberty – Araicha Sandhanam – Sinna thambi
Kalyanam – oru nalum unai – ejaman
First night – Thalaiyai Kuniyum Thamarai – Or odai nathiyagirathu – sridhar
Birthday – Thenmadhurai – Dharmathin Thalaivan
Thaalattu – Thooliyile , tene thenpaandi meene, mannava mannava – Walter
Blessing – Nooru varusham, Adi kaana karunguyile – poonthota kavalkaran
Appreciation – Potri Paadadi ponne, Kannu pada poguthu
Engagement – Vanthathe Kungumam – Kilakku Vaasal
Thoonga Vaikkum Paattu – Pachchai malai thenu – kilakku vaasal
Happiness for getting things done – Madai thirandhu -nizhzlgal
Pregnancy – Sindhiya venmani – Poonthotta kavallkaran
vazhai kappu – rakku muthu rakku -ejaman
Pongal- Thai pongalu vanthathu – mahanathi
Dheepavali – Pattasu suthi suthi – Poove poochoodava
Bogi – kattukuyilu, margalithan – Thalabathi
Mother’s death – En thayenum koyilai – Aranmanai kili
Athletic environment – Sickendra aadaiyil – iniya uravu pooththathu, Paruvame Pudhiya paadal – nenjaththai killathe)
Wive’s Loss – Sola Pasungiliye – En rasavin Manasula
16. Brother -sister Relation – Oru thanga Radhaththil – Dharma Uththam
17. Amma Songs – Amma endralaikkatha
18. Hamming Oriented songs – Poonthalirada – Panner Pushbangal
19. Dappanguthu songs ( Vadi en kappa kilangu, Podhuvaga en manasu)
20. Karnatic pure in nature – Sinna kannan azhaikiran – kavikuyil
21. Karnatic – Mixed Ragas – Punjai Undu – unnal mudiyum thambi
22. Conversion of existing raga into new one – Mari Mari ninne – Sindhu Bairavi
23. Starting in Folk Bridging to Complex karnatic raga – Paadariyen – Sindhu Bairavi
24. Gaanaa songs – Machchi Mannaaru – Ennuyir tholan
25. Pure English song in a Tamil Film – One two three – Punnagai Mannan
26. Quasi English – All The Time – Nadodi Thndral
I like to highlight this. Ilayaraja is the first person who designed songs which starts
with a rithm and the rithm occupies the entire film. If you hear the rithm alone itself, you can identify the song. 27. Rithm Oriented songs
There are a number of songs and I list a few.

Aasaiya Kaththula – Johny
Aattama – Captain Prabhakaran
Kadoram Lolakku
Nila adhu vaanaththu
Malai koil vasalil – Veera
AAsai adhigam
Mottai madi
Kattukuyilu
MASI MAASAM
Santhaikku vantha kili.

28. Instrument Oriented Song.

Ilaya nila – Guitar
Kalakaalmaga Vazhum – Violin
Raja Rajathi Rajanendra Raja – Drums ( Only Drums)
Thenmadurai – Piano
Manamagale – Devar Magan – Nathaswaram
Potri Paadadi – Devat Magan – Gadam
Nilavu Thoongum – Mouth Organ

29. Kindal Paattu – O party nalla party
30. Old song like songs – Paarijatha poove, Naan sirithal deepavali
31. He used Train sound as rithm in Goods Vandiyile – Kunguma chimizh
32. Exceptional songs even for Trivilial situations – Karumbu vil – meenkodi Theril
33. DEVOTIONAL ( JANANI JANANI)

I am tired of thinking any more. Somebody can help me for further list of songs.

I am sure no other music director can imagine doing this. Has any other music director before him or after him has achieved such a feet. I will challenge!

2. Background Music(BGM)
————————————-

Many of us when thinking and speaking about Ilayaraja, we give our emphasis to his songs. But his potential in Background music is amazing. We hardly talk about it because the involvment that is created by virtue of his BGM eliminates the feeling that music added separately after taking the film. Only in the absence of a quality BGM we feel that something is missing and talk about that.
I will give you an evidence for his talents in BGM. Mr. Piriyadharsan a Malayala Director ( Rated as one top 5 Indian Directors today) produced a monumental film “KALABANI” or “SIRAICHALAI”. When the project was started he gave an interview that he was selecting the technitians for the film from the Top 5 of the respective field. He told that he has only one choice for Music and it was Ilayaraja.
Raja’s professionalism in BGM can be best seen in “Mudal Mariathai and Devar Magan”. Raja has been accepted by almost all music directors in India as the Best BGM composer all time.

3. Trend Setting
———————

Many people are talking that trend has changed, This MD has changed the Trend and so on. They are using the word “Trend” as a filler without really specifying what they mean by trend.

Ilayaraja changed the following trends.

1. He proved that a Music director can take the entire credit for a song. Before Ilayaraja all songs were either MGR songs or SIVAJI songs or SSR songs or GEMINI songs. And the music directors did not get any credit for their songs. It includes MSV, V.KUMAR, KVM etc.
Ask anybody whose song is ANNAKILI? It is ILAYARAJA’S song. Whose song is “NALLAVARKKELLAM CHATCHIGAL RENDU” ? Is it a SIVAJI song? No!! It is Ilayaraja’s song. He is the person who brought the Music Director from behind the screen to front of the people. People started clapping the hands with enthu seeing the Title ” Isai – Ilayaraja”. No other MD has got such an appreciation from the public in India before that. People started asking “Isai Yaaru? Ilayarajava? Kandippa Polam!!”.
THIS IS THE TREND SET BY ILAYARAJA.

2. Ilayaraja proved that only his name is sufficient for the film advertisement. People did not bother who is the actor, actress , director, producer. Seeing Ilayaraja they went into the Theatre.
Kovaithambi advertised “Payanagal Mudivathillai” with Ilayaraja’s cut out. Songs made the film running for 250 days.
.THIS IS THE TREND SET BY ILAYARAJA

3. People claim that nowadays musical trend has been shifted to WESTERN. In 1991 ANJALI was released. The songs were declared by Press to be 21st CENTURY MUSIC. At that time only Manirathnam was there to Use Raja’s talents in WESTERN MUSIC. Only because of lack of quality customers, many of ilayaraja’s talents went unutilised.
WESTERN MUSIC IS THE TREND SET BY ILAYARAJA.

4. People claim that some of the today’s MD’s songs are copied by Hindi people. When Ilayaraja was copied by Hindi people for 15 yrs nobody wrote about that. Hindi Music Director “Anand Milind” openly stated that Ilayaraja is as good as the God and he does not feel ashamed to copy Raja as he is taking music from the Musical Guru. All songs in “CHINNATHAMBI” were copied. The song “THUTHTHUTHOO THUTHTHUTHARA” was copied from ” Raakamma Kaiya Thattu”. When you did not give popularities to these things that time.
Letting People to copy from Tamil
THIS IS THE TREND SET BY ILAYARAJA.

5. Some people say that Some of our Music Directors are very popular in Hindi too. Ilayaraja has already done music for Hindi – SADMA. In 80s When he enters into the studio, both sides of the road people from Telugu, Kannadam, Hindi were standing and beggging Ilayaraja to score music for them. But He spent all his time for Tamil Tamil Tamil. He paid the price for dedicating his time only for Tamil films. Today the same Tamil people dare to say that Raja avvalavuthaan.
He was the first Music Director to perform Music for Many Languages. He gave hit movies in Malayalam, Telugu, Kannadam, Hindi that also frequently except(Hindi).
THIS IS THE TREND SET BY ILAYARAJA.

6. I like to highlight this. Ilayaraja is the first person who designed songs which starts with a rythm and the rythm occupies the entire film. If you hear the rythm alone itself, you can identify the song.
I have already given a number of examples.
THIS IS THE TREND SET BY ILAYARAJA

7. Ilayaraja is the man who has done Miracle with carnatic music in cine songs. The Raga that was used in “Chinna Kannan Azhaikkiran” from kavikuyil is never indented for a happy song. Ilayaraja said that it can be used for happy songs and composed “Chinna Kannan Azhaikkiran” . (Those who know carnatic can explain better)
Also the song “Mari Mari Ninne” from sindhu Bairavi was sung in a different raga that is beyond the reach of lay people who do not know carnatic music. Ilayaraja with the same Lyrics, changed the Raga and made the song whispered by lay people.
For the first time in cine songs Ilayaraja started from a flok song that is written in the same Raga as “Mari Mari Ninne” in sindhubairavi, and bridged this folk song to the song “Mari Mari Ninne” itself. It was a miracle declared by carnatic people.
He mixed two ragas that are complicated and produced the song “Punjai Undu Nanjai Undu” from Unnal Mudium Thambi.
In 1994 december musical season Ilayarja was honoured bu the music academy for his invention of a new Raga ” Panjamugi ” and Ilayaraja was requested to start the season by singing. Famous violinist V.V.Subramaniyan explained Ilayaraja’s gimmics in cartnatic music.
In “Sindhu Bairavi” the last song was composed only with “Aarogam”, i.e. only increasing swaras. Exactlyb speaking the pitch will never come down. Mathematically it is like a Sawtooth wave.
THIS IS THE TREND SET BY ILAYARAJA

8. Ilayaraja was paid Rs 40 lacks for Thalabathi in 1991, the highest till then. He was the man who made the music directors to be paid on par with or ahead of actors.
THIS IS THE TREND SET BY ILAYARAJA

9. Many actors and directors insisted Producers to get the Callsheet from Ilayaraja and then only made commitments. The dependancy was such that if for some reason Ilayaraja stops scoring music the entire Tamil film industry will come to a Halt.
THIS IS THE TREND SET BY ILAYARAJA

10. After 1976 a lot of recording centres were started bearing Ilayaraja’s name and the boards drawn with Raja’s photo. They worshipped Raja like a God for promoting their career. This is very evident if you enquire a Recording centre owner.
THIS IS THE TREND SET BY ILAYARAJA

4. CONSISTENCY
————————

The average number of films Ilayaraja was scoring per year was 40 and in one year he had scored 55 films. The success percentage was more than 75 %. Even the songs which have failed were overshadowed by his other exceptional songs. Many of them were good if you see them alone. Also every hit song will immediately be followed by another one and he kept the people busy. He never gave excuse that for this reason this song failed. Also he never dissappointed the trust we and the customers had on him. Such a success in the industry has no parallel in any industry. There were days when people cursed Raja while coming out of theatre that one song out of 6 was not good. Such was his consistency and productivity.

5. CARNATIC MUSIC
——————————

I have discussed enough about his contributions to Carnatic Music in Para 3. He was appreciated by most of the Carnatic Specialists that his talent in Carnatic Music is in no way inferior to the best in the Carnatic Field.

6. ALBUMS
—————-

His famous albums are

1. How To Name it.
2. Nothing but wind.

Nothing but wind created a record sales in Europe while How to name it is a lesson in the violin Unversities for western Music. Raja has been awarded Honourary Doctor by ARIZONA UNVERSITY (USA) for his services.

His latest touch is obviously “SYMPHONY”. I am sure I need not tell the story about this as it is very obvious.

7. MULTY LINGUAL PERFOMANCE
————————————————–

To get an award for music in Malayalam is more difficult than getting at the national level. Ilayaraja has won the Best Music Director Award in Malayalam too. He gave mega hit songs in all south indian languages. Also he gave hit songs in Hindi Direcrly or Indirectly.

8. CUSTOMIZING SONGS
———————————–

Ilayaraja decided how the song should be for every actor and director. I will give a list of actors, directors and producers who might have gone null and void in Ilayaraja’s absence. I feel Rajinikanth is an exception. He was enhanced by Raja. But in the absence of Raja’s music he would have come in a different mould but not necessarily to this extent.

ACTORS
————-

Rajinikanth
—————

Right from Murattukkalai you can see the songs enhancing his image. He was built by Raja film by Film. He came out of Raja for Manithan. But at that time he was well estblished. It is debatable whether he dared to use a differnt Music director during his initial stage. Anyhow it is very evident that Ilayaraja has played a vital role in Rajini’s success. Even now VEERA was recovered by Ilayaraja which was openly accepted by Super star himself and the public. A failure at that time would have been a big set back to Rajini careerwise and politically.

Kamalahasan
—————–

He was called “KAADAL ILAVARASAN”. For what? Only because of songs in his films. Every Kamal Film had good songs. Particularly Kamal became an aggressive hero only after SAGALAKALAVALLAVAN. Without Raja’s songs he is nothing nothing nothing. Kamal Rasigargal forgive me. If you wish we can have a separate debate on this.

Vijaykanth
————–

After the failure of almost all films finally Vijaykanth got a confirmed berth in the industry when “VAIDEKI KATHTHIRUNTHAAL” was released. I remember the time it was released. The song “RASATHTHI ONNA” was sung like National Anthem. It was followed by “Amman Koil Kizhakkale”, “Ninaive Oru Sangeetham”, “Poonthotta Kavalkaaran”. Then only he settled.

SATHYARAJ, KARTHIK, PRABHU
———————————–

These guys are also benefited from a number of films like

Walter Vetrivel
Thirumathi Palanichami
Kadalora kavithaigal
Varusham 16
Kilakku Vaasal
Agni Natchaththiram
Chinna Thambi
Senthamizh Paattu

and a lot more which needs the help of a statistician.

OTHER ACTORS
———————–

This is a list of actors who do not have any specialities and survived only because of Ilayaraja.

MOHAN : Payanangal Mudivathillai, Udhaya Geetham, Nan Paadum Paadal, Paadu Nilave, Ilamaikalangal.

RAMARAJAN : Probably the funniest actor
Enga ooru Pattukaaran, Karagaattakaaran, and many medium hit movies

RAJKIRAN : En Raasaavin Manasula, Aranmanaikili, Ellaame En Raasaathan, Enna Petha Raasa(Producer)

MURALI : Poovilangu, Pagalnilavu, Namma Ooru Poovaaththaa, Poomani

DIRECTORS
—————–

1. BHARATHIRAJA
—————————-

Can you think of Barathiraja without Ilayaraja’s music? Did he get the success he got with Raja after leaving him? I am sure Barathiraja is the person who is benefited most from Raja. He is indebted to Raja like anything. But “Varattu Gouravam” prevents Barathiraja from joining with Raja. It is a quiet natural and very human. Because they were friends in boyhood. While Raja went to the height of controlling the entire cine field, Barathiraja even with the help of magnificent song struggled to secure a win in more than half of his career. He could become only the best director in the field whereas Raja went on to become the King of the Industry. Had Raja not been his childhood friend, he would have digested Raja’s success.
As far as I am concerned, Barathiraja can be accepted as a completely independent director only if he can give a film like “16 vayathinile”, “manvaasanai”, “alaigal oyvathillai”, “Mudal Mariaathai” in the absence of Raaja. Till then he can be considered to have gone null and void in the absence of Ilayaraja.

2. BALACHANDAR
—————————-

You know Balachandar in “Ninaithale Inikkum”. You know Balachandar in “Sindhu Bairavi”. Where was Balachandar between these two? Take a quick lok at the following films
SINDHU BAIRAVI
PUNNAGAI MANNAN
MANATHIL URUTHI VENDUM
UNNAL MUDIYUM THAMBI
PUDHU PUDHU ARTHTHANGAL

What does flash in your mind ? The stories? The actors? The actress? The Awards?

No !!! Songs Songs Songs . These songs went into Record books.

After the success of “Pudhu Pudhu Arththangal” many journals emphasised that the songs played the key roll in the success. Our Balachandar did not accept it . He told in the press that his story only was the vital reason for the success and he was not happy to give the Lion’s share to Raja. He also declared that he is not going to use Raja’s services anymore. Did he get that quality songs thereafter? No? Don’t say Duet! Only two songs that too did not help the film anyway!!

So it is very obvious that Ilayaraja is the Only person responsible for Balachandar’s success in the last decade.

3. BALUMAHENDRA
——————————

Balu himself accepted that He will stay with Raja as long as he does music as Raja played a major roll behind his success.
To accept the talent one person is good for another talented person. I don’t know why Barathiraja and Balachandar in spite of themselves being Giants in their field could not digest Raja’s Talents.

4. MAHENDRAN
———————–

A completed film before background music is called Double Positive technically. After finishing “Mullum Malarum”, Mahendran has shown the Double positive to Distributors. They refused to buy saying it is like documentary. But after Raja completed Rerecording there was a heavy demand among the Distributors. Mahendran also says Ilayaraja made a lot of difference in his Movies.

5. MANIRATHNAM
—————————-

Mani’s first two films were to be failed. But Raja salveged his pride.

They are Pagal Nilavu and Idhayakoil

Next is Mounaragam. obviously songs played the key roll.

Next one is Nayagan. Songs and BGM definitely made a difference.

Next one is Agni Natchaththiram. Only reason for success is Songs.

Next one is Idhayaththai Thirudathe. Only songs.

Next one is Anjali. Songs and BGM rescued from a disaster.

Next is Thalabathi. Songs were biggest hits.

Whenever Mani was in crisis, songs helped him a lot. Is that right today?

6.OTHERS
————–

The only strength of the following directors is Ilayaraja. In the absence of Raja’s music they would not have been noticed at all. ( Selvamani might have survived)

P.Vasu – Chinna Thambi, Walter Vetrivel, Senthamil Pattu

R.V.Udayakumar – Kilakku vaasal, Chinna Gounder, Ponnumani, Ejaman

R.K.Selvamani – Captain Prabhakaran, Chembaruththi, Pulan Visaaranai ( He was benefited by a very good BGM also)

R.Sundarrajan – Vaideki Kaththirunthal, Amman Koil Kilakkale, Payanangal Mudivathillai, Nan Padum Paadal, Rajathi Raja

K.Natraj – Udayageetham, Unnai Nan Sanththen, Ninaive oru sangeetham

Others like Rajkiran, Kalangiam, Kasthuriraja

PRODUCERS
——————

1. Sangili Murugan
2. Kovaithambi
3. Sathya movies
4. Sathyajyothi Films
5. Rajkiran
6. Amma creations Siva
7. G.V.Films

If you see the history of these people You see the role of Raja with them.

To conclude this topic 8 , if you consolidate you can see that the above people only constituted the entire Tamil Cine Field and Raja being the heart and backbone of each one’s success, it is very evident that Raja was the man who survived the entire field between 1976 and 1990. My prevoius argument that had Ilayaraja stopped scoring musivc in that period for some reason, the entire field would have collapsed and come to a halt, makes a little sense.

9. TECHNOLOGY IN MUSIC
—————————————

Ilayaraja was the first person to indroduce STEREO effect in songs. The film was Priya.

Ilayaraja was the first person to use computers for composing music. The film was VIKRAM.

10. RAJA’S RESPONSIBILTY IN MAKING THE FILM HIT
—————————————————————————–

If you see Mudal Mariathai and Devar Magan, you can see the dedication and commitment shown by Ilayaraja. In the course of BGM he suggests bit songs and some change in scrrenplay which worked out many times. Infact the name Devar Magan was suggested by Raja, Also in Chinna Goundar, the song “Sollal Adiththa sundari” was suggested by Raja and got a big calp. Also when s situation requires, he does not hesitate to write Lyrics and Sing himself.

11. HIS PRODUCTIVITY
———————————

You might have known this. The six tunes of “Chinna Thambi” were produced in 45 minutes by Ilayaraja. He has completed entire recording of 3 songs right from Tuning in a single day. As I already said He has produced 40 films on an average. i.e. atleast 200 songs an year in addition to rerecording in which raja is the quickest and best (in quality). He finishes BGM in 3 days normally. Apart from all these he spends time in learning carnatic, producing albums, symphony etc. He has completed 10 degrees in Piano in a London University which is the top Piano Univ in the world. He can play every instrument on par with a full time professional and he was one among the top 4 Guitarists in the 80s. His favourite instrument is Guitar.

12.HIS MAGNANIMITY
———————————

Many a times Raja has done music at low costs and sometimes at no cost for poor producers to uplift them. In 1993 when Parthiban was struggling for money to complete “Ulle Veliye”, Raja told him he may give money for the music if only the film becomes a successful one.

13. PROFESSIONAL COMPOSING
———————————————–

His composing style is something unique, extraordinary and stunning. He never asks the technitians to play the song and hear it. He completely writes the song as notes and ask them to play directly. He never changes the music during the course of regersal. It means he completely run the song in mind and exactly produces in the paper.
Whenever he goes to Bombay for recording, almost all Music Directors crowd at the stuio to view hi professionalism. Famous composer Naushad, the Music Director for Rajkaboor stated that Raja has achieved more tha 100 times other can think about and he has a lot to learn from the Genius Ilayaraja.

14. PROMOTING THE CINE INDUSTRY AND CONSUMER ELECTRONICS
—————————————————————————————————–

Until 1976 hardly few houses had radios and Taperecorders were rare. Till then even though people liked other songs, they were not ready to spend money over them. But once Raja was in, the whole industry was busy and people were crazy about songs. They started recording songs and all members of the house were keen at assembling whenever Vividbharathi or Neyar Viruppam was scheduled. Statistics reveal that the sale of Radios and taperecorders increased exponentially at that time.

I like to conclude here. I make a humble request to People cursing Raja. He is our guy who upheld out pride and represented us. You need not appreciate him. Atleast do not wound him. Do not compare Raja with any other Person. He is Beyond comparison. He has nothing more to achieve. Also he need not prove that he is a genius. We have enough evdence. One can atmost aim at equalling his talents.
I do not argue that other music directors are inferior to Ilayaraja. My arguement is that Ilayaraja is superior to other people.

I am sorry for such a big discussion and I appreciate your patience to read this article and I thank you. If you feel I missed something or I am wrong somewhere do not fail to notify.

இளையராஜா - பகுதி 1 1

senthilkumaran | 7:48 AM |

IR is a perfectionist. He has the film industry for 20 years. He has composed music for more than 700 films. And I heard he has composed new ragas(I can remember Panchamukhi..). And finally he is gifted and that is the reason why he is able to provide so many good songs which have made the people long for his music.
Why was Salvador Dali considered a genius? All his paintings were not recognized when he lived because it was surrealistic. Galileo was beheaded because he invented the telescope.. All the men who were great are not recognized when they live. Only after they die people sing praises of them.
I am sure that people will certainly realize that IR was a genius in future. Because, the great composers like Bach, Beethoven, Mozart, Vivaldi are not forgotten and they are still immortal because of their greatness. So, I feel that IR will also have a everlasting name in Tamil music’s history. God Bless him!!

Anybody can become No. 1 some time or other. Being the no. 1 what are your achievements and what is your contribution? Ilayaraja has nothing to achieve anymore. Can any one of you give me a department in Music where any music director has achieved something better than Ilayaraja? I will discuss in detail his achievement in all departments of music to my knowledge. If I am wrong or If you know something I missed I welcome a healthy argument supoported by solid arguments.

In the statement I quoted, he has said ARR has done a better job in his first five years. In his First 5 years Raja has done more than 200 films and more than 1000 mega hit songs. He was not promoted by any producer or Director or Press or satellite TVs. How do you put these 200 films and 1000 songs against 25 films and 30 songs? Are you crazy?

You yourself had said that Raja has 20 years exp. while ARR has 5 years exp. In 20 years Raja has scored more than 800 films and 4000 songs. He has atleast 150 films where all the songs in the film were super hits. He has more than 2000 hit songs and his average films per year is 40. If you project ARR’s career, he has done only 30 films so far and around 15 hit movies and 50 hit songs. Assuming consistency he can atmost do 125 films and around 200 hit songs. Has he ever done music for a low budget film or a new director or an actor like Ramarajan, Rajkiran, Murali etc? In what sense you claim that he has done a better job? In the amt he is paid? I will give you an information. Ilayaraja was paid Rs.40 lacks for Thalabathi in 1991, which was the best ever salary in India till that time. He has earned more than 300 crores in 20 years.

In another place he mentioned that Ilayaraja has copied Hindi and western? Do you have evidence? I have evidence for Rahman’s copying. The flute music that starts “Ennavale” in Kadalan was taken from a famous western composer who generously declared that anybody can use his composings as a library. Rahman has agreed this in an interview with Anantha Vigatan.

Now I will start with How Ilayaraja is uncomparable.

I claim Ilayaraja to be uncomparable in the following concerns.

1. Songs
2. Background Music
3. Trend Setter
4. Consistency
5. Carnatic Music
6. Albums
7. Multi Lingual Perfomance
8. Customizing Songs for directors/actors
9. Technology in music
10. His magnanimity
11. His responsibity in making the film A super hit
12. His Productivity – Quickness & Excellence
13. His professional Composing style
14. Promoting the cine industry / consumer electronics